கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் மோசமான வெப்ப அலை நிலவுகிறது. வரலாறு காணாத வெப்பத்தால் சீனாவின் புகழ் பெற்ற நதியான யாங்சே, போயாங் ஏரியும் வறண்டு போயுள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, வேளாண் உற்பத்தி பாதிப்பு, மின்சார உற்பத்தி நிறுத்தம் என பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். சீனாவில் வெப்பச் சலனம் காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் பல மணி நேர மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த வெப்ப அலையின் தாக்கம் வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என சீனாவின் வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் சீனாவில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சியளித்த நிலையில், தற்போது எங்கு பார்த்தாலும் வறட்சியான சூழ்நிலை காணப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் சீனா படாதபாடு பட்டுவரும் நிலையில், கொளுத்தும் வெயிலால் சீனாவைச் சேர்ந்த முதியவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை காண்போரை களங்க வைத்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் உள்ள முதியவர்கள் வெப்பத்தை சமாளிப்பதற்கான புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். சவுத் சைனா மார்னிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், சீனாவில் வாட்டி வதைக்கும் வெப்பத்தை தாங்க முடியாமல் தங்களது வீடுகளுக்கு அருகேயுள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் முதியவர்கள் ரிலாக்ஸ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
These elderly people are chilling.... literally ☃️ pic.twitter.com/QAmG5m8Rc9
— South China Morning Post (@SCMPNews) August 24, 2022
ஹூபேயில் உள்ள ஏ.சி. சூப்பர் மார்க்கெட்களில் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ரேக்குகளுக்கு நடுவே முதியவர்கள் அமர்ந்திருக்கின்றனர். ஒரு பக்கம் மின்வெட்டும், மறுபக்கம் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலும் வாட்டி வதைப்பதால் கடந்த சில மாதங்களாகவே பகல் வேலைகளில் வீட்டிற்குள் இருக்க முடியாமல் முதியவர்கள் பலரும் இதுபோன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் தஞ்சம் புகுந்து வருவதாக சீன செய்தி நிறுவனமான சவுத் சைனா மார்னிங் தெரிவித்துள்ளது.
Also Read : கோட்டயத்தில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவிகள்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பும் திகில் காட்சிகள்...
ஆரம்பத்தில் சூப்பர் மார்க்கெட் தரையில் அமர்ந்து வந்த முதியவர்கள், தற்போது வீட்டிலிருந்து வரும் போதே சிறிய அளவிலான நாற்காலிகளைக் கொண்டு வந்து காலியாக இடங்களில் அமர்ந்து கொள்வதாகவும், அவர்களை வெளியேற்ற முயன்றாலும் முடிவதில்லை என்றும் சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் தூங்குவதற்காகவே சூப்பர் மார்க்கெட்டிற்கு வருவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
வெப்ப அலை காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் சீனா முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் தங்களது பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்தியுள்ளன. குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் அளிக்க வேண்டியது முதன்மையாக இருப்பதால் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில், ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா உள்ளிட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 21 நகரங்களைக் கொண்ட இந்த மாகாணத்தில் மட்டும் 19 தொழிற்சாலைகள் கடந்த வாரம் முதல் வேலையை நிறுத்தியுள்ளன.
Also Read : ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை பாஜக கவுன்சிலர் வீட்டில் மீட்பு.. சிக்கிய குழந்தை கடத்தல் கும்பல்
தென்மேற்கில் உள்ள சிச்சுவான் முதல் யாங்சே டெல்டாவில் உள்ள ஷாங்காய் வரையிலான அனைத்து பகுதிகளிலும் பல வாரங்களாக அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. எனவே சீனா தேசிய வறட்சி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.