ராஜபக்சே அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றாலும், ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை கடந்த மாதம் அதிபர் சிறிசேனா பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக்கினார்.
எனினும், ராஜபக்சே தரப்பு தனது பெரும்பான்மையை நிரூபிக்காததால், நாடாளுமன்றத்தில் இரண்டு முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இரண்டிலும் ராஜபக்சே தோற்றாலும், இதனை சிறிசேனா ஏற்றுக்கொள்ளவில்லை.
அரசியல் குழப்பங்களுக்கு இடையே, மீண்டும் நாடாளுமன்றம் கூடி அதில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராஜபக்சே, ரணில் ஆகிய இருவருமே தங்களை பிரதமர் என்று கூறிவருவதால், அந்நாட்டு அரசியல் சூழல் இடியாப்ப சிக்கலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அதிபர் சிறிசேனா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ராஜபக்சே அரசு பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினாலும், நான் மீண்டும் பிரதமராக ரணிலை நியமிப்பதற்கு வாய்ப்பே இல்லை.
எனது முடிவால் அரசியலில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனாலும், இதை நான் தீவிரமான அரசியல் நெருக்கடியாக கருதவில்லை.
ரணில் அரசு நிர்வாகத்தில் பல தீவிரமான கொள்கை மாறுபாடுகளை கடைபிடித்தார். அதில் முதன்மையானது உயரதிகாரிகள் நியமனம்.
விதிகளின் அடிப்படையில் உயரதிகாரிகளை நியமிக்க கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்தேன். ஆனால் விக்ரமசிங்கே அதன் பரிந்துரையை நிராகரித்தார்.
உயர் கல்வித் துறையையும், நெடுஞ்சாலைத் துறையையும் ஒரே அமைச்சகம் கையாளும் என்று விக்ரமசிங்கே அறிவித்தார். மற்றொரு முக்கிய பிரச்சினை, மத்திய வங்கி கவர்னராக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த அர்ஜூனா மகேந்திரன் என்பவரை நியமித்தார்.
அவர் இலங்கையை சேர்ந்தவர் இல்லை, அவரை அந்த பதவிக்கு நியமிக்கக் கூடாது என்று நான் கூறியும், அதனை நிராகரித்துவிட்டு அவரையே வங்கி கவர்னராக நியமித்தார்.
மத்திய வங்கி பத்திரங்கள் வெளியிட்டதில் மிகப்பெரிய நிதி முறைகேடு நடைபெற்றதற்கு மகேந்திரனே பொறுப்பு. விசாரணையில் அவர் குற்றவாளி என்றும் உறுதியானது. ஆனால் அவர் இப்போது தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்பது விக்ரமசிங்கேவுக்கு தெரியும்.
விக்ரமசிங்கேவின் 3 ஆண்டு பிரதமர் பதவிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
Also See..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mahinda Rajapakse, Maithripala Sirisena, Ranil Wickremesinghe, Srilanka