அமெரிக்காவின் மாபெரும் நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகரின் மொத்த மின் தேவையில் சுமார் 85 சதவீதம் அளவுக்கான மின்சாரம் என்பது, புதைவடிவ எரிபொருள்கள் மூலமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதனால், கார்பன் வெளியேற்றம் மிகுதியாக இருக்கிறது.
கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் மூலமாக மின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை நியூயார்க் மாநகரம் முன்னெடுத்து வருகிறது. இத்தகைய சூழலில், கனடாவில் இருந்து நியூயார்க் நகருக்கு நீர்மின்சாரம் கொண்டு வருவதற்கான திட்டத்திற்கு நியூயார்க் மாகாண ஆளுநர் காதி ஹோசல் ஒப்புதல் அளித்துள்ளார்.
4.5 பில்லியன் டாலர் மதிப்பீடு
இந்த நீர்மின் திட்டத்தை 4.5 பில்லியன் டாலர் செலவில் செயல்படுத்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள சாம்பியன் ஹட்ஸன் பவர் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் இருந்து சுமார் 546 கி.மீ. தொலைவில் உள்ள நியூயார்க் நகருக்கு மின்சாரம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த திட்டத்தை 2025ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
2040ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நியூயார்க் நகரம் இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், இந்த மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து நியூயார்க் மாகாண ஆளுநர் காதி ஹோசல் விடுத்துள்ள அறிக்கையில், “சுமார் 339 மைல் (546 கி.மீ.) தொலைவு கொண்ட இந்தத் திட்டத்தை 2025ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு அமெரிக்காவின் பொதுப்பணி கமிஷனும் ஒப்புதல் அளித்திருக்கிறது.
Also Read : அந்த கோகோ கோலா கம்பெனி என்ன விலைப்பா? சொல்லுங்க பேசி முடிப்போம்.. எலான் மஸ்க் கிண்டல்
இது மட்டுமன்றி 20 இடங்களில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் நியூயார்க் நகரில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மாபெரும் இரண்டு திட்டங்கள் இவையாகும். இந்த இரு திட்டங்களும் 2030ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும்போது நியூயார்க் நகரில் கார்பன் வெளியேற்றம் சுமார் 50 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்திற்கு எதிர்ப்பு
சாம்பியன் ஹட்சன் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரிவர்கீப்பர் என்னும் சுற்றுச்சூழல் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இதே அமைப்பு தான் இதற்கு முன்பு இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தது.
கனடாவில் அமையும் நீர் மின் நிலையத்தில் இருந்து சுமார் 1,250 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் நியூயார்க் நகருக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலமாக நியூயார்க் நகரில் உள்ள 1 மில்லியன் குடும்பங்களுக்கு மின் விநியோகம் செய்ய முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Also Read : சிறுமியை தாக்கி கடத்திச் செல்ல முயன்ற குரங்கு… அதிர்ச்சி வீடியோ
இதுகுறித்து சாம்பியன் ஹட்ஸன் திட்டத்தை செயல்படுத்தும் ஹைட்ரோ- கியூபெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஷோஃபி புரோச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருவ நிலை மாற்றத்தை எதிர்கொண்டு, மாசற்ற மின் உற்பத்தியை கொண்டு வர வேண்டும் என்ற நியூயார்க் மாநகர மற்றும் கியூபெக் நகரின் இலக்கை அடைவதில் இத்திட்டம் மாபெரும் அத்தியாயமாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: NewYork