பாகிஸ்தானில் அதிவேகமாகச் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. பலுசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியில் அதிவேகமாகச் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தூணில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து பேருந்து தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 40 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மூவரில் ஒருவர் சிகிச்சையின்போது உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் உயிருக்கு போராடி வருகின்றனர். ஒட்டுநர் தூக்க கலக்கத்தில் வண்டி ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியிருக்கலாம் என ஆய்வு செய்த அரசு உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கோட் என்ற பகுதியில் சிறுவர்கள் பயணித்த சுற்றுலா படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உள்ளூர் மதராசாவில் படிக்கும் சுமார் 30 மாணவர்கள் அங்குள்ள டன்டா நீர்த்தேக்க ஏரிக்கு சுற்றுலாவுக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் படகில் பயணித்தபோது அது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய சிறுவர்களின் வயது 7 முதல் 14 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், 11 சிறுவர்களை மீட்டுள்ளதாக உள்ளூர் காவலர் மிர் ராப் தெரிவித்துள்ளார். மீதமுள்ள நபர்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுவதாக கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Boat capsized, Bus accident