காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு உலக நாடுகளுக்கும் எடுத்துச் செல்வோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்வதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அதனையடுத்து, நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. மத்திய அரசின் இந்த நகர்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரம், இந்திய எல்லையைக் கடந்தும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், ‘காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை அடிபணிய வைக்க வேண்டும் என்று இந்தியா அரசு விரும்புகிறது. மக்கள் தொகை மாற்றத்தின் மூலம் காஷ்மீரில் இன அழிப்பு செய்வதற்கு இந்தியா விரும்புகிறது. புல்வாமா தாக்குதல் நடைபெற்றபோது, அந்த சம்பவத்துக்கு பின்னணியில் பாகிஸ்தான் இல்லை என்று விளக்குவதற்கு நாங்கள் கடுமையாக முயற்சி செய்தோம். அவர்கள், தேர்தலுக்காக எங்களை பலியாடாக ஆக்கிவிட்டார்கள்.
அவர்கள், இன்றும் இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்கிறார்கள். தற்போதைய சூழலில், இந்தியாவில் அனைவரும் சமம் இல்லை. நான் இந்தியாவுக்கு சென்றிருந்தபோது, நான் சந்தித்தவர்கள் பாகிஸ்தான் தனியாக பிரிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது, அவர்கள் ஜின்னாவின் முடிவை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
இந்தியா, இந்து நாடாக இருக்க விரும்புகிறது. அவர்கள், இஸ்லாமியர்கள் சமமாக கருதவில்லை. இந்தியா அரசின் செயல், காஷ்மீர் பிரச்னையில் எரிபொருளை ஊற்றுவது போன்றது. காஷ்மீர் மக்கள் தொகையில் மாற்றம் கொண்ட வரவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இது ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, வெறுக்கத்தக்கது.
இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கத்தின்படியும் தவறு. மாட்டுக் கறி சாப்பிட்டதற்காக, பா.ஜ.க அரசு கும்பல் கொலையில் ஈடுபட்டுள்ளது. இது அவர்களது இனவாத கொள்கையின் ஒரு பகுதி. தற்போது, அந்த கருத்தியலை, காஷ்மீர் மீதும் திணித்துள்ளது. இந்திய அரசின் இந்த இனவாத செயலால் புல்வாமா தாக்குதல் போன்ற சம்பவங்கள் அதிகரிக்கக் கூடும்.
காஷ்மீரில் அவர்கள் தற்போது இன அழிப்பை மேற்கொள்ளப் போகிறார்கள் என்று எனக்கு அச்சமாக உள்ளது. பா.ஜ.கவின் இனவாத கருத்தியலால் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் விதத்தை நாங்கள், ஐ.நாவுக்கும் சர்வதேசங்கள் முன்பும் எடுத்துச் செல்வோம்’ என்று தெரிவித்தார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PM Imran Khan