அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில், கமலாஹாரிஸின் பூர்வீகமான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலான தர்ம சாஸ்தா சேவகபெருமாள் ஆலயத்திற்கு கமலா ஹாரிஸ் 1991ம் ஆண்டு நன்கொடை அளித்துள்ளதாகவும், அந்த தெய்வத்தின் சக்தியாலேயே கமலா உயர் பதவிகளுக்கு சென்றுள்ளதாகவும் கூறுகின்றனர் கிராமத்தினர். மேலும், அவர் அதிபராக உயருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
துளசேந்திரபுரம் பகுதியில் முறுக்கு வியாபாரம் செய்யும் பெண்மணி ஒருவர் கமலா ஹாரிஸ் என முறுக்கு மாவில் பெயர் எழுதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கமலாஹாரிஸ் தனது பெருமுயற்சியினால் அமெரிகக் துணை அதிபராக உயர்ந்திருப்பதன் மூலம், தங்கள் கிராமத்திற்கு மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளதாக கிராமத்தினர் பெருமிதம் தெரிவித்தனர்.
துணை அதிபராக இருக்கும் கமலா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அதிபராக உயரும் வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்காக இன்றே தாங்கள் பிரார்த்திக்கத் துவங்கி விட்டதாகவும் குறிப்பிடுகின்றனர் கிராமத்தினர். இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் அடுத்த அமெரிக்க அதிபராக கமலாஹாரிஸ் தேர்வு செய்யப்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
துளசேந்திரபுரம் கிராமம் உலகப்புகழ் பெற்றுவிட்டதாகவும், அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸ் துணை அதிபராக அமெரிக்காவை சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்றும் கிராமமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.