நாட்டின் ஒற்றுமைக்காகவும், தேசம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கவும், உறுதியுடன் பணியாற்றுவேன் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபராக, இந்தியாவை பூர்விகமாக உடைய கமலா ஹாரிஸ் நேற்று முன் தினம் பதவியேற்றார். தான் இந்த நிலைமையை அடைந்ததற்கு தான் பார்த்த, பழகிய கறுப்பின பெண்கள் தனக்கு முன்னுதாரணம், பெண்களின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பாடுபடுவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் தன் தாய் பற்றி உருக்கமாக கமலா ஹாரிஸ் பதிவிட்டதாவது:
பல லட்சம் அமெரிக்கர்களின் கதை தான், என் கதை. என் தாய் சியாமளா கோபாலன், புற்றுநோய் ஆராய்ச்சியாளர் என்பதுடன். மக்கள் உரிமைக்காக போராடியவர். அவரை முன் உதாரணமாக வைத்துத் தான், வாழ்ந்து வருகிறேன். என்னையும், என் சகோதரி மாயாவையும், மிகவும் பொறுப்புடன் வளர்த்தார். 'நாம் முதலிடத்தில் இல்லாமல் இருந்தாலும், நிச்சயம் கடைசி இடத்தில் இருக்கக் கூடாது' என வலியுறுத்தினார்.
இந்த பதவியை நான் அடைந்ததற்கு, என் மீது அவர் வைத்த நம்பிக்கை தான் காரணம். என் தாய் தனது 19-வது வயதில் அமெரிக்காவுக்கு வந்தார். அவர் அப்போது, இப்படி ஒரு நிகழ்ச்சியை கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார். எனினும், அமெரிக்காவில் இது போன்ற நிகழ்வுக்கு வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை,
அவரிடம் இருந்தது, என்றார் கமலா ஹாரிஸ்.