பிரிட்டனில் நிலவும் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியாமல் லிஸ் டிரஸ் அண்மையில் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து ஆளும் கட்சியின் புதிய பிரதமருக்கான போட்டி பரபரப்பாக நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் கட்சியின் அதிக ஆதரவைப் பெற்று கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் தேர்வாகியுள்ளார்.
பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள ரிஷி சுனக்கின் அரசியல் பாதை குறித்து பார்க்கலாம்.
பிரிட்டனின் சவுத்தாம்ப்டனில் 1980-ம் ஆண்டு பிறந்தவர் ரிஷி சுனக். பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட அவரது தாத்தா - பாட்டி, கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து 1960-களில் பிரிட்டனில் குடியேறினர். ரிஷி சுனக்கின் தந்தை யஷ்வீர் சுனக், மருத்துவர் ஆவார். பிரிட்டனின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான ஸ்டான்ஃபார்டு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் தத்துவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை முடித்தார். 2009-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியை சுனக் திருமணம் செய்து கொண்டார்.
இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு நிதி ஆலோசகராக இருந்த வந்த சுனக்.
அரசியல் ஆர்வம் காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்தார். பின்னர் 2014-ம் ஆண்டு ரிச்மாண்டு தொகுதியில் எம்.பி. வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். 2015- ல் தெரேசா மே அரசில், இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2020- ஆம் ஆண்டில் போரிஸ் ஜான்சன் அரசில் நிதியமைச்சரானார்.
அப்போது, கொரோனா முடக்கத்தின் காரணமாக உலகமே பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்தது. பொது முடக்காத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்காக 32 லட்சம் கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை அறிவித்தார். ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாதப்படி பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே சொந்த கட்சி எம்பிக்களின் விமர்சனத்திற்கும், சுனக் ஆளானார்.
கொரோனா பொது முடக்கத்தின் போது முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் விருந்தில் ரிஷி சுனக்கும் பங்கேற்றார். அதற்காக அரசுக்கு சுனக் அபராதமும் செலுத்தினார்.
ஒரு காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டனை ஆளப்போகிறார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்!
இது மட்டுமல்லாமல் அவரது மனைவி அக்ஷதா மூர்த்திக்கு விரிச்சலுகைகள் அளித்தாக சுனக் மீது மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது. அக்ஷதா பிரிட்டன் குடியுரிமை பெறாமல், Non-Domicile Status எனப்படும் குடியுரிமை இல்லாத அந்தஸ்துடன் அங்கு வசித்து வருகிறார். Non-Domicile Status என்பது பிரிட்டனில் வெளிநாட்டு வருமானத்தின் மீதான வரியைத் தவிர்க்க பயன்படுத்தும் திட்டமாகும். இதன் மூலம் அவர், இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து பெற்ற லாபத் தொகைக்கு வரி விலக்கு பெற்றதாக சர்ச்சை எழுந்தது. சர்ச்சைக்கு பின்னர் அவர் வரி செலுத்த ஒப்புக்கொண்டார்.
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்ததால் தனது நிதியமைச்சர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை அடுத்து பல எம்பிக்களும், அமைச்சர்களும் பதவி விலகினர். இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி போரிஸ் ஜான்சனின் பதவிக்கும் உலை வைத்தது.
இதைத்தொடர்ந்து பிரிட்டனில் நிலவும் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியாமல் லிஸ் டிரஸ் அண்மையில் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து ஆளும் கட்சியின் புதிய பிரதமருக்கான போட்டி பரபரப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மோர்டான்ட் விலகியதைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் கட்சியின் அதிக ஆதரவைப் பெற்று கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் தேர்வாகியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரிட்டன் பிரதமராகிறார் என்கிற வரலாற்றை ரிஷி சுனக் படைத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.