புவியியல் மாற்றம் என்பது ஒவ்வொரு நொடியும் நடந்து கொண்டே இருக்கிறது. நாம் வாழும் பூமி வெப்ப குழம்புகள் நிரம்பிய கோளாக இருந்தது சிறுசிறு மாற்றங்கள் ஏற்பட்டு இன்று உயிர்கள் வாழும் கிரகமாக உள்ளது. இன்றும் புவியியல் மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அந்த மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை ஐநா ஆராய்ந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நீர், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான ஐநா பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதன் முடிவில் வண்டல் படிவங்கள் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள சுமார் 3,700 பெரிய அணைகள் 2050 ஆம் ஆண்டுக்குள் அவற்றின் அசல் சேமிப்புத் திறனில் 26 சதவிகிதம் வரை இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளது.
ஐநா சுமார் 150 நாடுகளில் உள்ள 47,000க்கும் மேற்பட்ட அணைகளின் தரவுகளை சேகரித்து அதில் ஏற்பட்ட மற்றும் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தது. அதன்படி உலக அளவில் பெரும்பாலான அணைகள் அசல் கொள்ளளவில் 16 சதவிகிதத்தை ஏற்கனவே இழந்துவிட்டதாகக் கூறியது. மேலும் 2050 இல் அணைகளின் சேமிப்புத் திறன் சுமார் 25 சதவிகிதம் வரை குறையும் என்றும் கணக்கிட்டுள்ளது.
இந்தியாவை போலவே 2050 ஆம் ஆண்டில் அமெரிக்கா 34 சதவிகிதம், பிரேசில் 23 சதவிகிதம், சீனா 20 சதவிகித கொள்ளளவை இழக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கொள்ளளவு குறைவதற்கு அநேக காரணங்கள் இருப்பினும் வண்டல் தேக்கம் காரணமாக ஏற்கனவே 50,000 பெரிய அணைகளின் கொள்ளளவு 13 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை சுரண்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய ராஜ்யம், பனாமா, அயர்லாந்து, ஜப்பான் மற்றும் சீஷெல்ஸ் ஆகியவை 2050 ஆம் ஆண்டளவில் அவற்றின் அசல் திறன்களில் 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அதிக நீர் சேமிப்பு இழப்பை சந்திக்கும் என்று ஆய்வு காட்டுகிறது. இதற்கு நேர்மாறாக, பூட்டான், கம்போடியா, எத்தியோப்பியா, கினியா மற்றும் நைஜர் ஆகியவை குறைந்த பாதிப்புக்குள்ளான ஐந்து நாடுகளாக இருக்கும். அவை இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் 15 சதவீதத்திற்கும் குறைவாகவே பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனம், மின் உற்பத்தி மற்றும் நீர் வழங்கல் உள்ளிட்ட தேசியப் பொருளாதாரங்களின் பல அம்சங்கள் பாதிக்கப்படும். கட்டப்பட்டு வரும் அல்லது திட்டமிடப்பட்டுள்ள புதிய அணைகள், வண்டல் படிவுக்கான சேமிப்பு இழப்பை ஈடுசெய்யாது. உலகளாவிய நீர் சவாலுக்கு இக்கட்டுரை எச்சரிக்கையாக ஒலிக்கிறது,” என்று ஆய்வின் இணை ஆசிரியரான டாக்டர் துமிந்த பெரேரா ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தியாவின் மத்திய நீர் ஆணையம் 2015 இல் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான 141 பெரிய நீர்த்தேக்கங்களில், நான்கில் ஒரு பங்கு அணைகள் ஏற்கனவே அவற்றின் ஆரம்ப சேமிப்புத் திறனில் குறைந்தது 30 சதவீதத்தை இழந்துவிட்டதாக அறிவித்தது. தற்போதைய ஆய்வு அனைத்து நீர்த்தேக்கங்களிலும் ஏற்பட இருக்கும் குறைபாட்டை சுட்டுகிறது, நீர்மேலாண்மையின் உடனடி தேவையையும் அவசர நிலைக்கு மாற்றுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Analysis Report, Dams, United Nation