கிரீஸ் நாட்டில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 57 பேர் உயிரிழந்ததை கண்டித்து தலைநகர் ஏதென்சில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
கிரீஸ் நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஏதேன்சில் இருந்து தெஸ்ஸாலொனிகி (thessaloniki) நகருக்கு 350 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த ரயில் லரிசா அருகே தெம்பி ( Tempi) என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. 2 ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில், பயணிகள் சென்ற ரயிலில் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். 85 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்துகுள்ளான ரயில் ஹெலனிக் என்ற தனியார் நிறுவனம் இயக்கியது என்பது தெரியவந்துள்ளது. இதில் 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வேண்டுமென்றே விபத்து நிகழ்த்தப்பட்டதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சந்தேக்கின்றனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் ஸ்டேஷன் மாஸ்டரை கைது செய்துள்ளனர். சிவப்பு சிக்னலை கடந்து செல்ல கூறியதாக ஆடியோ பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நடந்ததாக ஸ்டேஷன் மாஸ்டர் விளக்கம் அளித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த கோர விபத்துக்கு ரயில்வே அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று கூறி ஏராளமானோர் ஏதென்சில் பேரணியாகவும் சென்றனர். இது அஜாக்கிரதையால் நடந்த விபத்து என்று கூறி கிரீசில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏதென்சில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் திடீரென சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியாக போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். ரயில்வே நிர்வாகத்தின் நிர்வாக கோளாறு காரணமாகவே விபத்து நேரிட்டதாக கூறி மக்கள் போராடி வரும் சூழலில், ரயில் விபத்துக்கு அந்நாட்டு பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Protest, Tamil News, Train Accident