ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே மினிபஸ் மற்றும் மசூதிகளில் நிகழ்ந்த 4 குண்டுவெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பிராந்தியமான மசர்-ஐ-ஷெரிப் பகுதியில் மூன்று மினி பேருந்துகளில் மூன்று வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு அவை வெடிக்கப்பட்டுள்ளன. இந்த கோர தாக்குதலில் இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் வெடிகுண்டு வெடித்து விபத்துக்குள்ளானதில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.22க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மசூதியில் இருந்த மின்விசிறியில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து விபத்துக்குள்ளானதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. மேலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதா எனவும் இதுவரை உரிய தகவல் கிடைக்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய பின்னரும், அங்கு பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ரம்ஜான் மாதம் நிறைவு பெற்ற அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 12க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. ஏப்ரல் 29ஆம் தேதி சன்னி பிரிவு மசூதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல், ஏப்ரல் 22 ஆம் தேதி சூபி பிரிவு வழிபாட்டினரை குறிவைத்து குந்தூஸ் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். இதற்கும் ஐஎஸ் அமைப்பின் சன்னி பிரிவு குழு பொறுப்பேற்றது. ஏப்ரல் 21ஆம் தேதி மசர்-இ-ஷெரிப் பகுதியில் உள்ள மசூதியில் நடைபெற்ற தாக்குதலில் 12க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க:
Texas School Shooting: 19 குழந்தைகளைக் கொன்ற கொடூரன்: தன் முகத்தையே பல முறை கத்தியால் குத்திக் கிழித்தவன், சிறுவயதில் கடும் கேலிக்கு ஆளானவன்
இவ்வாறு ஆப்கானிஸ்தானின் இஸ்லாம் மதத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் மீது வெவ்வேறு குழுக்கள் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திவருவதால் அங்கு அமைதி நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.