FAKE NEWS FRANCE CANCELS VISAS FOR 183 PAKISTANIS RIZ
பாகிஸ்தானைச் சேர்ந்த 183 பேரின் விசாவை பிரான்ஸ் ரத்து செய்ததாக பரவிய வதந்தி - விளக்கமளித்த பாகிஸ்தான்
பாகிஸ்தானைச் சேர்ந்த 183 பேரின் விசாவை பிரான்ஸ் ரத்து செய்ததாக வதந்தி
பாகிஸ்தான் உளவு அமைப்பின் முன்னாள் தலைவரின் சகோதரி உள்பட 183 பேரின் விசாவை பிரான்ஸ் அரசு ரத்து செய்ததாகவும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டுள்ளதாகவும் வதந்தி ஒன்று பரவியது.
பிரான்ஸ் நாட்டில் முகமது நபியின் கேலிச் சித்திரத்தை வகுப்பறையில் காண்பித்ததற்காக, வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பேட்டி என்பவர் 18 வயது இளைஞரால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வரலாற்று ஆசிரியரின் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலால் அவர் கொல்லப்பட்டதாக கூறினார். மேலும், இஸ்லாமிய பிரிவினைவாதத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக கூறிய அவர், இஸ்லாம் ஒரு மதமாக உலகம் முழுவதும் சிக்கலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நிகழ்வையொட்டி மேக்ரான் இஸ்லாமிய வெறுப்புடன் கருத்து தெரிவிப்பதாகவும் வேண்டுமென்றே கோடிக்கணக்கான முஸ்லிம்களை காயப்படுத்தும் விதமாகப் பேசுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்தார்.
அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பல்வேறு அரபு நாடுகளும் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, பாரிசின் நீஸ் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் நுழைந்து 3 பேரை ஒருவர் கொலை செய்தார். இதுபோன்ற பயங்கரவாதச் சம்பவங்களால் பிரான்ஸ் முழுவதும் அதிநவீன ஆயுதங்களுடன் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த 183 பேரின் விசாக்களை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் ரத்து செய்ததாக பிரான்ஸில் உள்ள பாகிஸ்தான் தூதரத்தின் பெயரில் வதந்தி ஒன்று பரவியது.
— Embassy of Pakistan, Paris, France (@PakinFrance) November 1, 2020
அதுகுறித்து தன் ட்விட்டர் விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் தூதரகம், பாரிஸில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு @PakInFrance எனும் ஒரே ஒரு ட்விட்டர் கணக்குதான் உள்ளதாகவும் மற்ற கணக்குகள் போலியானவை, தவறாக வழிநடத்துபவை என்றும் கூறியுள்ளது. மேலும், இதுதொடர்பாக ட்விட்டருக்கு புகார் தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.