முகப்பு /செய்தி /உலகம் / திவலாகும் சீனாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட்ட நிறுவனம்.. உலக பொருளாதாரத்தையே புரட்டிப் போடும் அச்சம்

திவலாகும் சீனாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட்ட நிறுவனம்.. உலக பொருளாதாரத்தையே புரட்டிப் போடும் அச்சம்

சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட், கடன் தொல்லையால் திவால் ஆகும் நிலைக்கு சென்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய முதலீட்டு வங்கியாக இருந்த லேமென் பிரதர்ஸ், கடந்த 2008-ஆம் ஆண்டு திவால் நோட்டீஸ் கொடுத்தது. கணக்கு வழக்கு இல்லாமல் வீட்டுக் கடன் கொடுத்த லேமென் பிரதர்ஸ் வங்கி, வாராக் கடனால் திவாலானது. அந்த வங்கியை தொடர்ந்து மேலும் சில வங்கிகள் பெரும் இழப்பை சந்திக்க, அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் கண்டது. இந்த தாக்கம், உலக பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு உலக பொருளாதாரம் இதே போன்ற ஒரு நிலையை சந்திக்கப் போகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கு காரணம் சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 53-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹுய் கா யான் என்பவருக்கு சொந்தமானது எவர்கிராண்ட் நிறுவனம். 1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், வானளாவிய கட்டடங்களை கட்டுவதில் புகழ் பெற்றது. சீனாவில் மட்டும் தற்போது ஆயிரத்து 300 கட்டடங்களை கட்ட ஒப்பந்தம் பெற்றுள்ளது. 22 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் திணறுகிறது. எவர்கிராண்ட் நிறுவனம், 620 கோடி ரூபாய் அளவுக்கு கடன் மற்றும் வட்டியை வியாழக்கிழமை செலுத்த வேண்டும் என்ற நிலையில், கடன் மற்றும் வட்டியை குறித்த நேரத்தில் செலுத்த இயலாது என அந்நிறுவனத்தின் தலைவர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டன. இந்தியாவிலும் இதன் தாக்கம் காணப்பட்டது. அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், பில் கேட்ஸ் உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் ஒட்டு மொத்தமாக 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளனர். வளரும் சந்தைகளை கொண்டுள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்க நாடுகளின் நாணயங்கள் சரிவை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.

Also Read : 8 நாளில் ₹27 லட்சத்துக்கு பிரியாணி பில் - அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

எவர்கிராண்ட் நிறுவனத்திற்கு கடன் அளித்தவர்கள் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதன் தாக்கம் வேறு நாடுகளில் எதிரொலிக்காது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்பதால், மீண்டும் ஒரு மந்தநிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: China, News On Instagram