விரும்பத்தகாத டிவிட்டுகள் டிரெண்டிங் ஆவதை தடுக்கும் விதமாக டிவிட்டர் நிறுவனம் ரகசிய குழுவை உருவாக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஜோ பைடன் மகனின் சந்தேகத்திற்குரிய வணிக பரிவர்த்தனைகள் தொடர்பான டிவிட்டுகள் தணிக்கை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பிரபல மைக்ரோ பிளாக்கிங் தளமான டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து எலான் மஸ்க், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத் தலைவராக எலான் மஸ்க் பொறுப்பேற்கும் முன்பு விரும்பத்தகாத டிவிட்டுகளை டிரெண்டிங்கில் இருந்து தடுத்து நிறுத்த ரகசிய குழு ஒன்று டிவிட்டரில் செயல்பட்டு வந்ததாக ”டிவிட்டர் கோப்புகள்” என்ற பெயரில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.
பத்திரிகையாளர் பாரி வெயிஸ், ‘டிவிட்டர் கோப்புகள்-2 என்ற தலைப்பில் 31 டிவிட்களை வெளியிட்டுள்ளார். அதில், டிவிட்டரின் சட்ட, கொள்கை மற்றும் அறக்கட்டளைத் தலைவராக இருந்த விஜயா காடே உள்ளிட்டோர் தலைமையில் இயங்கிய ரகசிய குழு தடுப்புப்பட்டியலை உருவாக்கியதாகவும், விரும்பத்தகாத டிவிட்டுகளை டிரெண்டிங்கில் இருந்து தடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: செவ்வாயில் மீண்டும் ஆய்வைத் தொடங்கிய நாசா... மாதிரிகள் சேகரிப்பு!
பிரபலமான தலைப்புகள் டிரெண்டிங் ஆவதை தடுத்ததுடன், நிழல் தடை எனப்படும் செயலாக்கத்தின் மூலம் தீவிர வலதுசாரி பயனாளர்களின் டிவிட்டுகளை பிற நபர்களுக்கு தெரியப்படுத்தாமல் முழுமையாக கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இப்படியான ட்வீட்களை ரகசியமாக கடைப்பிடித்ததாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா ஊரடங்கு குழந்தைகளை பாதிக்கும் என்று டிவிட்டரில் வாதிட்ட ஸ்டேன்ட்போர்டு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஜெய் பட்டாச்சாரியாவின் டிவிட்டர் கணக்கை டிரெண்டிங் தடுப்பு பட்டியலில் வைத்ததாகவும் பாரி வெயிஸ் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.
டிவிட்டர் கோப்புகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் மாட் தைப்பி (Matt Taibbi) என்பவர் வெளியிட்டுள்ள மற்றொரு டிவிட்டர் பதிவில், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஜோ பைடனின் மகன் ஹன்டர் உக்ரைனில் தொழில் ரீதியாக முறைகேடு செய்தது தொடர்பாக டிரம்பின் ஆதரவாளர்கள் வெளியிட்ட டிவிட்டர் பதிவுகளை டிவிட்டர் நிறுவனம் தீவிரமாக தணிக்கை செய்ததாக கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ஹன்டர் பைடன் உக்ரேனிய தொழிலதிபர்களுடன் உரையாடிய வீடியோவை நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட நிலையில், அதனை டிவிட்டர் பயனாளர்கள் ரீடிவிட் செய்ய முடியாமல் தடுத்ததாகவும், நியூயார்க் போஸ்ட் டிவிட்டர் பக்கத்தை பல நாட்கள் முடக்கி வைத்ததாகவும் மாட் தைப்பி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திடீரென்று முடக்கிய ஜிமெயில் சேவை - உலகம் முழுவதும் பயனர்கள் அவதி
டிவிட்டர் நிறுவனம் அனைவருக்கும் தடைகள் இல்லாமல் தகவல்களை உடனடியாக பகிர்ந்துகொள்ளும் உரிமையை வழங்கியிருப்பதாக நம்பப்பட்டு வந்த நிலையில், "நிழல் தடை" அல்லது " Visibility Filtering" என்ற பெயரில் தகவல்களை தணிக்கை செய்ததாகவும், பாரபட்சம் கட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருப்பது டிவிட்டர் பயனாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டிவிட்டர் கோப்புகள் சம்பவம், அந்நிறுவனத்தில் அனைத்தும் சரியாக இல்லை என்பதை நிரூபித்திருப்பதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார். சமூக ஊடகத் தளங்கள் "இணையதளத்தில் உரையாடலைத் திரித்துவிட்டால், அதனை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இதனை தடுக்க தற்போதுள்ள விதிகளை மாற்றியமைக்க அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிழல் தடை எனப்படும் செயல்பாட்டின் கீழ் பயனாளர்களின் டிவிட்டுகள் உள்ளதா என்பதைத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தடைக்கு எதிராக அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிவிட்டதால், அது உண்மையான சுதந்திரமான கருத்துக்களை பகிரக்கூடிய தளமாக மாறிவிடும் என பலரும் புகழ்ந்து பேசி வரும் நிலையில், இனி டிவிட்டர் நிறுவனம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elon Musk, Twitter, Twitter new policy