நேட்டோவில் சேர முடிவெடுத்ததால் உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்தது. ஓராண்டு கடந்தும் போர் இன்னும் நடைபெற்று வருகிறது. இந்தப் போரால் உக்ரைன் நாடு கிட்டத்தட்ட உருக்குலைந்து போயுள்ளது. பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது உக்ரைன்.
உட்கட்டமைப்பிலும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் குழந்தை பிறப்பு விகிதம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா மீது போர் தொடுத்ததில் இருந்து பல லட்சம் உக்ரேனியர்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து விட்டனர். அப்படி புலம் பெயர்ந்தவர்களில் பெண்கள் அதிகம் பேர்.
ஆனால் ஆண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு போரில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். போருக்கு முன்னால் உக்ரைனின் மக்கள் தொகை நான்கரை கோடி. போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை சுமார் 80 லட்சம் பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அப்படி வெளியேறியவர்களில் பெண்களுக்கு அடுத்தபடியாக இளைஞர்கள் அதிகம். ஆனால் உக்ரைன் நாட்டில் இருக்கும் மூத்த குடிமகன்கள் அந்த நாட்டை விட்டு செல்லவில்லை. குறிப்பாக மிகவும் மோசாமாக பாதிக்கப்பட்டு உருக்குலைந்து கிடக்கும் பக்முட், கேர்சான் உள்ளிட்ட நகரங்களில் கூட முதியவர்கள் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். இது போன்ற பல்வேறு காரணிகளால் உக்ரைனில் பிறப்பு விகிதம் மிக வேகமாக சரிந்து வருவதாக அங்குள்ள மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஊடகங்களிடம் பேசிய கீவ் நகர மகப்பேறு மருத்துவமனை இயக்குநர் மலன்சுக் ஓலேக் போரிசோவிச் மகப்பேறு மருத்துவமனைகள் ஆளில்லாமல் வெறிச்சோடிப் போய் கிடப்பதாக கூறினார். போர் தொடங்கிய கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தங்கள் மருத்துவமனையில் ஒரே நாளில் 17 பிரசவங்கள் நிகழ்ந்ததாகவும், 200 பேருக்கு மேல் மகப்பேறு சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.
ஆனால் அடுத்த சில நாட்களில் இருந்து மகப்பேறு சிகிச்சை படிப்படியாக குறைந்து இப்போது வெறிச்சோடிப் போய் கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக கிழக்கு மற்றும் மத்திய உக்ரைன் பகுதிகளில் பிறப்பு விகிதம் அதளபாதாளத்திற்கு போய்விட்டதாகவும் மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பெரும்பாலான பெண்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாலும், ஆண்கள் போர்க்களத்தில் இருப்பதாலும் பிறப்பு விகிதம் இவ்வளவு பெரிய சரிவை சந்தித்திருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் உக்ரைன் நாட்டு அரசு அதிகாரிகள். 8 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறுவது என்பது மக்கள் தொகையில் மட்டுமல்ல, குழந்தை பிறப்பு விகிதத்தையும் வெகுவாக பாதித்து, எதிர்காலத்தில் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடும் என்பதுதான் அந்நாட்டு அரசாங்கத்தின் கவலையாக உள்ளது. போரால் இன்னும் என்னெவெல்லாம் சந்திக்க இருக்கிறதோ உக்ரைன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Russia - Ukraine