கேப்பிட்டோல் ஹில் நாடாளுமன்ற வளாகத் தாக்குதலில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக எழுந்த வழக்கிலிருந்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தப்பினார். இது தொடர்பான வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 7 பேர் டிரம்புக்கு எதிராகவே வாக்களித்து பரபரப்பு ஏற்படுத்தினர்.
கண்டனத் தீர்மானத்திலிருந்து நூலிழையில் தப்பிய டிரம்ப் 2024ம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசி விட்டு அதிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பிய அதிபர் டிரம்ப் இது குறித்து கூறும்போது, “அமெரிக்காவின் பெருமையை நிலைநாட்டும் பணிகளை இனிதான் தொடங்கவுள்ளேன். என்னுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், பயணங்கள் பற்றி அடுத்த மாதம் அறிவிப்பேன்” என்றார்.
எனவே தீவிர அரசியலில் அவர் இனிதான் ஈடுபடப்போவதாக நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர், இதோடு அடுத்த அதிபர் தேர்தலில் இவரோ இவரது குடும்பத்தாரோ போட்டியிட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
அமெரிக்க செனட் சபையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இதில், கடந்த ஜனவரி 6ம் தேதி வன்முறையை தூண்டும் வகையில் பேசிய டிரம்புக்கு எதிராக செனட் சபையை சேர்ந்த குடியரசு கட்சியினர் 7 பேர் வாக்களித்தனர். அவர்கள் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து டிரம்புக்கு எதிராக நின்றனர். எனினும் அவர் சார்ந்த குடியரசு கட்சியினர் பலர் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், செனட் சபையில் 57- 43 என்ற கணக்கில் ஆதரவு வாக்குகளை பெற்ற டிரம்ப் குற்றவாளி இல்லை என தீர்ப்பு கிடைத்து இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.
இந்த கண்டன தீர்மான வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் டிரம்ப் கூறுகையில், நம்முடைய அமெரிக்க வரலாற்றில் பெரிய சூன்ய வேட்டையின் மற்றொரு கட்டம் இது. எந்தவொரு ஜனாதிபதிக்கும் இதுபோல் நடந்தது இல்லை என தெரிவித்துள்ளார்.
வரலாற்றிலேயே 2வது முறையாக கண்டனத் தீர்மானத்தைச் சந்தித்த ஒரே அதிபராகவும் இருக்கிறார் டிரம்ப். பதவியிலிருந்து விலகிய பின்பும் கண்டனத்தீர்மானத்தை எதிர்கொண்ட அதிபராகவும் இருக்கிறார்.
கண்டன தீர்மானத்தில் குற்றவாளி என்று முடிவாகியிருந்தால் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.