உக்ரைனின் Bucha நகரில் ரஷ்யா ராணுவம் நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. இங்கு 300க்கும் அதிகமான பொதுமக்களை ரஷ்ய ராணுவம் கொன்று குவித்ததாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், சுமார் 50 பொதுமக்கள் கட்டி வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட சில பொதுமக்களின் உடல்கள் மீது கண்ணி வெடிகளை ரஷ்ய ராணுவம் வைத்து விட்டு சென்றிருப்பதாக உக்ரைன் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் புச்சா என்ற நகரம் அமைந்துள்ளது. சுமார் ஒரு மாத சண்டைக்கு பின்னர் இந்த நகரத்தை உக்ரைன் வீரர்கள் கடந்த வாரம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க - பையில் 90,000 டாலர் பணமா? துபாய் பறந்த இம்ரான் கானின் பினாமி மீது எதிர்க்கட்சிகள் புகார்!
இதன்பின்னர் வீதி மற்றும் கட்டிடங்களில் பாதுகாப்புக்காக பதுங்கியிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், கொல்லப்பட்டவர்கள் பெரிய குழிகள் தோண்டப்பட்டு அதில் புதைக்கப்பட்டதாகவும் உக்ரைன் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்ய ராணுவம் புச்சா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது மனித உரிமை மீறல்கள் பல நடந்திருப்பதாக புகார் கூறப்படுகிறது. பொதுமக்களின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டும், நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டும் உயிரிழந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதையும் படிங்க - உணவுக்காக தவிக்கும் 2.6 கோடி ஷாங்காய் மக்கள் - மீண்டும் சீனாவை மிரட்டும் கொரோனா!
இந்த நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரஷ்ய அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஐநாவுக்கான ரஷ்ய தூதுவர் வேசிலி நெபன்சியா கூறுகையில், 'ரஷ்யாவுக்கு எதிராக பொய் பிரசாரங்கள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. புச்சா நகரை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது ஒருவர் கூட வன்முறையால் பாதிக்கப்படவில்லை' என்று கூறியுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நாட்டிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள், அதற்கு ஆதாரமான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை போலியானதாகும், ரஷ்யா மீது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இவை திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.