பறவைக் காய்ச்சலின் புதிய வேரியண்டால் சீனாவில் முதல் முறையாக மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டின் கடைசியில் கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூகான் பகுதியில் உள்ள இறைச்சி மார்க்கெட்டில் இருந்து முதல் முறையாக மனிதர்களுக்கு பரவியதாக நம்பப்படுகிறது. சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் ஏறக்குறைய உலக நாடுகள் அனைத்திலும் பரவி ஒட்டுமொத்த மனித இனத்தையுமே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது என்றே கூறலாம்.
ஓராண்டைக் கடந்துவிட்டாலும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் உள்ளது. போதாக்குறைக்கு உருமாறிய கொரோனா தொற்று உலகில் இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கும் வித்திட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஒரு நாளைக்கு புதிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்த நிலையில் உயிரிழப்புகளும் புதிய உச்சத்தை தொட்டது.
கொரோனாவின் தாண்டவமே கட்டுப்படாத நிலையில் தற்போது அதே சீனாவில் உருமாறிய பறவைக் காய்ச்சலால் முதல் முறையாக மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் உலக நாடுகளை அச்சுறுத்துவதாக உள்ளது.
பறவைக்காய்சலின் H10N3 வேரியண்டால் சீனாவின் ஜியாங்ஸூ மாகாணத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு இதுவரை பரவாமல் இருந்த H10N3 வகை வேரியண்டால், உலகிலேயே முதல் முறையாக மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது சற்று அதிர்ச்சியை தந்துள்ளது.
Also Read : பறவை காய்ச்சல் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் உங்களுக்காக...
Zhenjiang நகரைச் சேர்ந்த அந்த 41 வயது நபருக்கு பல்வேறு அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கடந்த மே 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு H10N3 வகை பறவைக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்தது.
எனினும் அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்ய இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவருடைய நெருங்கிய தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டு அவர்களின் உடல்நிலையையும் மருத்துவர் குழு கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு கோழி அல்லது வேறு ஏதேனும் விலங்கின பண்ணையில் இருந்து தொற்று பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.
Also Read: மிரட்டும் பறவை காய்ச்சல் தொற்று.. எப்படி பரவுகிறது? அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
உலகிலேயே முதல் முறையாக பறவைக்காய்ச்சலால் மனிதர்களிடையே 1997ம் ஆண்டு ஹாங்காங்கில் கண்டறியப்பட்டது. பின்னர் H5N1 வகை பறவைக்காய்ச்சல் வைரஸ் பாதிப்பால் 6 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் என்னற்ற பறவைக்காய்ச்சல் வகைகள் இருப்பதாகவும் இதில் H7N9 என்ற வகை வேரியண்ட் பாதிப்பால் கடந்த 2016 - 17ம் ஆண்டில் 300 பேர் வரை பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு அதிக அளவில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியதாக தகவல் இல்லை,
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் H5N8 என்ற வகை பறவைக்காய்ச்சலால் முதல் முறையாக மனிதர் ஒருவர் பாதிப்புக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Avian influenza, Bird flu, China