தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் கசையடி கொடுக்கும் தண்டனை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கைகள் மூலம் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பெண்கள் வேலைக்கு செல்வதற்கும், கல்வி கற்பதற்கும் கூட தலிபான்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால் சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கும் தலிபான் ஆட்சியாளர்கள் உள்ளாகியுள்ளனர். சர்வதேச நாடுகள் தலிபான்களின் ஆட்சியை இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் மற்றொரு கடுமையான சட்டமான குற்றவாளிகளுக்கு பொது வெளியில் கசையடி கொடுக்கும் தண்டனையை தலிபான்கள் மீண்டும் அமல்படுத்தியுள்ளனர்.
கடந்த 1990 வரை ஆப்கனில் இந்த சட்டம் நடைமுறையில் இருந்தது. பின்னர் இந்த சட்டம் அங்கு பின்பற்றப்படவில்லை. ஆனால் தலிபான்கள் தற்போது இந்த சட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். தலிபான்களின் முக்கிய தலைவர் ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தலிபான்களின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹிதின் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
ஷரியத் சட்டத்தின் படி பொதுவெளியில் தண்டனை நிறைவேற்றுதல், கல்லால் அடித்தல், கசையடி மற்றும் திருட்டு குற்றங்களுக்கு உறுப்புகளை அறுத்தல் உள்ளிட்ட தண்டனைகளை விதிக்குமாறு தலிபான் ஆட்சியாளர்கள் அந்நாட்டில் உள்ள நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கசையடி தண்டனை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் உருவாக்கிய ஷாப்பர் -2 டிரோன்... எத்தனை சக்தி வாய்ந்தது தெரியுமா?
குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்க தலிபான்கள் முடிவு செய்தனர். குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் நிகழ்ச்சியை காண வருமாறு முஜாகிதீன் அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் பழங்குடி தலைவர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு லோகார் மாகாண கவர்னர் அலுவலகம் அறிவிப்பு விடுத்தது.
அதன்படி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 14 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் 21 கசையடி முதல் 39 கசையடி வரை கொடுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த 14 குற்றவாளிகளும் விபச்சாரம், வழிப்பறி மற்றும் லஞ்ச ஊழல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
அவர்களுக்கு கசையடி தண்டனையை நீதிமன்றம் அளித்துள்ளது. இதையடுத்து லோகாரில் உளள் கால்பந்தாட்ட மைதானத்தில் இந்த கசையடி பொதுமக்கள், அதிகாரிகள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட்டப் பிறகு பெண் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆண் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், லோகார் மாகாண செய்தி தொடர்பாளர் ஒமர் மன்சூர் முஜாகிதின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இது போன்ற தண்டனைகள் மிகவும் கடுமையாக நிறைவேற்றப்படும் என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
செய்தியாளர்: ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Taliban