அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆர்த்தி பிரபாகர் என்பவரை நியமிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பொறுப்பு ஆர்த்திக்கு வழங்கப்படும் பட்சத்தில், அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெருமையை பெறுவார். அத்தோடு, இந்த பொறுப்பில் இதுவரை வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்களே பதவி வகித்த நிலையில், முதல்முதலாக மாற்று இனத்தைச் சேர்ந்த நபரான ஆர்த்திக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன் இந்த பொறுப்பில் இருந்த எரிக் லான்டர் என்பவர், தனக்கு கீழ் பணியாற்றிவர்களை துன்புறுத்தி, அங்கு மோசமான பணிச்சூழலை ஏற்படுத்திய காரணத்திற்காக பதவியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து இந்த பதவிக்கு ஆர்த்தி பிரபாகர் தேர்வாகியுள்ளார்.
63 வயதான ஆர்த்தி, இந்தியாவில் பிறந்தவர். பின்னர், இவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடியேறிய நிலையில், கர்லிபோனியா பல்கலைக்கழகத்தில் இவர் முனைவர் பட்டம் பெற்றார். அதன் பின்னர், 7 ஆண்டுகள் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தில் பணிபுரிந்தார். இவர் பயோடெக்னாலஜி, ஆற்றல் சக்தி, பொது சுகாதாரம் ஆகிய தளங்களில் முக்கிய பங்களிப்பை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் தகவல் தொழில்நுட்பத்தின் மையமாகக் கருதப்படும் அமெரிக்காவின் சிலிகான் வேலியிலும் இவர் கூட்டு முதலீட்டாளராக செயல்பட்டுள்ளார்.முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளின்டன் மற்றும் பராக் ஒபாமா ஆட்சி காலத்தில் முறையே NIST மற்றும் DARPA ஆகிய அரசு அமைப்புகளின் இவர் பணியாற்றியுள்ளார்.
இவரின் தேர்வு குறித்து ஒபாமாவின் அறிவியல் ஆலோசகராக இருந்த ஜான் ஹோல்டன் கூறுகையில், ஆர்த்தி பிரபாகரின் தேர்வு மிகச் சிறப்பானது. இவர் அதிபரின் ஆலோசகராக திறம்பட செயல்படுவார் என நம்புகிறேன். இவரிடம் கூர்மையான நேர்த்தியான வேலைத் திறனும், தலைசிறந்த தலைமைப் பண்பும் உள்ளன எனப் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க:
தன்னுடைய கழிவுகளை சூட்கேசில் எடுத்துசெல்ல பாடிகார்ட்? புதின் பற்றி பரவும் தகவல்
புதிதாக பொறுப்பேற்கும் அறிவியல் ஆலோசகருக்குச் சீனாவை எதிர்கொள்வதே பிரதானப் பணியாகக் கருதப்படுகிறது. அன்மை காலத்தில் ஆய்வுத்துறையில் சீனா அசுர வளர்ச்சி பெற்று வரும் நிலையில், அதற்கு ஈடுகட்டும் விதமான செயல்பாட்டை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, சீனாவின் போட்டியை எதிர்கொள்வதே புதிய ஆலோசகரின் பிரதான சவாலாகக் கூறப்படுகிறது. இந்த சவாலை இந்தியாவில் பிறந்த ஆர்த்திப் பிரபாகர் தான் எதிர்கொள்ளப் போகிறார் என அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.