இலங்கையில் நடைபெறும் போராட்டத்தால் திரிகோணமலை கடற்படைத் தளத்தில் மகிந்த ராஜபக்சே தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், திரிகோணமலையின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்கலாம். இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் வனப்புக்கும், எழில்மிகு தோற்றத்திற்கும் ஒரு சான்றாக விளங்குவது திரிகோணமலை. மூன்று பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்து, இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட துறைமுகம் அமைந்துள்ள இடம் இந்த திரிகோணமலை.
இந்து மகாசமுத்திரத்தின் சாவி என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்திற்கு அடுத்ததாக, அழகான இடமாக விளங்குகிறது திரிகோணமலை துறைமுகம். இதனால், ஆண்டுதோறும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில், அதிகம் பேர் வரும் இடங்களில் ஒன்று திரிகோணமலை. எங்கெங்கு திரும்பினும் இயற்கை எழில் நிறைந்த திரிகோணமலை துறைமுகம் ஆழத்திலும் ஆபத்தானது.
மலைகளால் சூழ்ந்த இந்த துறைமுகத்தில் நிற்கும் ஒரு கப்பலுக்கு அருகில் மற்றொரு கப்பல் நின்றால் கூட கண்ணுக்கு தெரியாது என்பார்கள் விவரம் அறிந்தவர்கள். அதனால், ரேடார் கண்காணிப்பில் கூட சிக்காத வகையில், சாதாரணக் கப்பல்கள் முதல் நீர்மூழ்கி கப்பல்கள் வரை நிறுத்தி வைக்கப்படுவது வாடிக்கை. ஆழமான, அழகான துறைமுகத்தைக் கைப்பற்ற, ஆதி காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை மட்டுமல்ல புலிகள் காலத்தில் கூட போர் நடந்துள்ளது. இலங்கை கடற்படை தளம் அமைந்துள்ள இங்குதான், மகிந்த ராஜபக்ச தஞ்சம் அடைந்திருப்பதாக வெளியாகியுள்ளன தகவல்கள்.திரிகோணமலை பல கருப்பு பக்கங்களை தாங்கி நிற்கும் கடற்படை தளமாகும்.
இலங்கையில் இறுதிப் போர் உச்சம் பெற்ற காலத்தில், வதை முகாம்கள் வரிசை கட்டிய இடங்களில் ஒன்று திரிகோணமலை.கைது செய்யப்பட்ட தமிழர்களை வதை செய்வதற்காக, ராஜபக்ச ராணுவம் ஏற்பாடு செய்த இடம் இது. இறுதிப் போரில் சரண் அடைந்த விடுதலைப் புலிகளில் பலர் மாயமான தகவல் அனைவரும் அறிந்ததே.
அவர்கள் அனைவரையும் கொடுமை செய்து, கொலை செய்த இடமாக கூறப்படுவது இந்த திரிகோணமலைதான்.அது தொடர்பான அடுத்தடுத்த புகார்களால். அலறியடித்துக் கொண்டு வந்த ஐ.நா.வே ஆய்வு செய்தபோது வெளியானது அதிர்ச்சி தகவல்கள். காரணம் இலங்கை ராணுவம் ரகசியமாக வைத்திருந்தது ஒன்றல்ல, இரண்டல்ல 12 சிறைச்சாலைகள்.
இதையும் படிங்க: இனி நிலவில் விவசாயம் செய்யலாம்... சாதனை படைத்த நாசா விஞ்ஞானிகள்!
சுவர்களில் ரத்தக்கறை படிந்து, தமிழர்கள் வதை செய்யப்பட்டது தொடர்பாக ஆங்காங்கே இருந்தன ரத்த அடையாளங்கள். இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு சாட்சியாக அமைந்த இடங்களில் ஒன்று திரிகோணமலை. தமிழர்கள் அலறிய அதே இடத்தில், தற்போது சிங்களர்களுக்கு அஞ்சி, தஞ்சம் அடைந்திருக்கிறார் மகிந்த ராஜபக்சே.
செய்தியாளர் - பெரிய பத்மநாபன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.