தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியுரியும் ஊழியர்கள் பணி நேரத்தில் அமர்ந்து வேலை செய்ய இருக்கை வசதி வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழக அரசு சமீபத்தில் முடிவு செய்தது. அதை தொடர்ந்து, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் அளித்துள்ள விளக்கத்தில், “மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றனர்.
தங்களது வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலை ஆட்களின் நிலைமையை கருத்தில் கொண்டு கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலை ஆட்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியம் என கருதுகிறது. எனவே, அரசானது 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவமானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது” எனத் தெரிவித்தார்.
Must Read | இந்த 4 உணவுகளும் உங்கள் ஆயுட்காலத்தை அதிகரிக்குமாம்! ஆய்வு சொல்லும் உண்மை!
இந்த அறிவிப்பானது பல தரப்பினரின் வரவேற்பை பெற்றதுடன் மட்டுமில்லாமல், 2010ஆம் ஆண்டு வெளியான அங்காடி தெரு திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வசந்தபாலன் ‘அங்காடி தெரு திரைப்படத்தின் கனவு மெல்ல நிறைவேறுகிறது’ என்று தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
சரி, நீண்ட நேரம் ஒருவர் நிர்ப்பதால் உடல் நலனில் என்ன மாதிரியான கோளாறுகள் ஏற்படும் என்பதை மருத்துவர் கருணாநிதியிடம் கேட்டறிந்தோம். அவர் கூறியதாவது, “இதில் உடல்நலப் பிரச்சனைகள் மட்டுமல்ல, உளவியல் ரீதியான பிரச்சனைகளும் உண்டு. முதலில் இதில் பார்க்கப்பட வேண்டியது, பணியாளர்களின் வேலை நேரத்தை 8 முதல் 10 மணி நேரமாக குறைக்க வேண்டும். அதிகபட்சம் 10 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யக்கூடாது. சுத்தமான கழிப்பறை வசதி என்பது குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் மிக மிக அவசியம். மேலும், நிறுவனங்கள் மூலம் பணியாளர்களுக்கு தரப்படும் உணவு தரமாக இல்லை என்றால், அவர்கள் சாப்பிடாமல் பணிக்கு வர வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி நடந்தால், நீண்ட நேரம் நின்றவாறே பணி செய்யும் பொழுது குறிப்பாக மாதவிடாய் நேரத்தில் பெண்கள் மயங்கி விழுவார்கள். மேலும், இவர்களுக்கு இரத்த சோகை பிரச்சனையும் இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது பணியாளர்களுக்கு மட்டுமல்ல, அந்நிறுவனத்திற்கும் நஷ்டம்தான். மேலும், நீண்ட நேரம் நிற்பது வெரிகோஸ் வெயின்ஸ் என்ற நோயை ஏற்படுத்தும். வெரிகோஸ் வெயின்ஸ் என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், வீங்கியும் உள்ள நிலையைக் குறிக்கும். இவ்வாறு வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் உடலின் மற்ற இடங்களில் தோன்றும் என்றாலும், பொதுவாக இந்நோயானது காலில் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் சிக்கலைக் குறிக்கிறது. இது நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பதால் ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்சனை ஆகும். எடுத்துக்காட்டாக, ஒரு பணியாளருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தால் மாத்திரை போட்டுக்கொண்டு நீண்ட நேரம் நின்றால் தலைசுற்றி கீழே விழுவார்கள். மொத்தத்தில், இதுபோன்ற பணி செய்யும் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. சூழல் காரணமாக பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். பணியாளர்களை நிறுவனம் சரிவர கவனித்தால்தான் அந்த நிறுவனத்திற்கும் நன்மதிப்பும் லாபமும் கிடைக்கும். இதில் உடல்நலனை விட மனநலன் சார்ந்த விஷயங்கள் நிறைய அடங்கியுள்ளன”, என்று அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Explainer, Health issues, Healthy Life