நடிகர்கள், நடிகைகள் பொதுவாக எங்குச் சென்றாலும் புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு லைக்-குகளை பெறுவது டிரெண்டாகி வருகிறது. எனவே பல புகைப்பட கலைஞர்கள், நடிகர், நடிகைகள் வீடுகளுக்குள் இருக்கும் புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமலேயே எடுத்துப் பதிவிட்டு வருகின்றனர். இது பல வேளைகளில், தனிப்பட்ட உரிமைகளைப் பாதிக்கிற விதத்திலும், மாறியிருக்கிறது. நீண்டகாலமாக இருக்கும் இந்த பிரச்சனை தற்போது பாலிவுட் சினிமாவில், மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஆலியாபட், பால்கனியில் அமர்ந்திருக்கும் போது, அதை எதிர் கட்டிடத்திலிருந்து ஜும் செய்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “என்னை வைத்து விளையாடுகிறீர்களா? நான் என் வீட்டில் சாதாரணமாக மதிய வேளையில் அமர்ந்திருந்தபோது, என்னை யாரோ பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். எனது வீட்டின் அருகில் உள்ள கட்டிடத்திலிருந்து யாரோ என்னைப் புகைப்படம் எடுப்பது தெரிந்தது. இது என்ன உலகம், இதுபோன்று புகைப்படம் எடுப்பது அனுமதிக்கப்பட்டுள்ளதா?. இது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைவது! ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதையும் இன்று கடந்துவிட்டனர் என்பதுதான் பாதுகாப்பானது” என்று பதிவிட்டு மும்பை போலீசாருக்கு டேக் செய்துள்ளார்.
இது குறித்து பாலிவுட் பிரபலங்களும் தங்களுடைய எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.
நடிகை அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இது முதல்முறை அல்ல. இரண்டு வருடங்களுக்கு முன் இதே பிரச்சனையை நாங்களும் எதிர் கொண்டோம். ஒருவரின் தனிப்பட்ட இடம் மற்றும் தனியுரிமைக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இது நிச்சயம் அவமானகரமான விஷயம்! நாங்கள் பலமுறை எங்கள் மகளின் புகைப்படத்தைத் தவிர்க்கக் கோரியும், அவர்கள் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை ஜான்விகபூர், ஒருமுறை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் புகைப்படத்தைச் சிலர் வெளியிட்டிருந்தனர். அதற்கு அவர் கடும் எதிர் தெரிவித்திருந்த நிலையில், அவரும் ஆலியா பட் புகைப்படம் பற்றி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார்.
தனிநபரின் புகைப்படங்களை அவரது அனுமதி இன்றி வெளியிடுவது குறித்து சட்டம் என்ன சொல்கிறது.
Article 21-ன் படி, ஒருவரது அனுமதியில்லாமல் அவரது புகைப்படமோ வீடியோவோ எடுக்கப்பட்டால் அது சட்டப்படி குற்றமாகும். மேலும், ஒரு பெண்ணை பின் தொடர்வது மற்றும் வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பதும் குற்றமாகவே கருதப்படும். 2013-ம் ஆண்டு நிர்பயா வழக்குக்குப் பின், புகைப்படமோ, வீடியோ எடுப்பவர் இந்தியத் தண்டனைச் சட்டம் 354 C பிரிவிலுள்ள Voyeurism என்ற சட்டத்தின் அடிப்படையிலும் தண்டிக்கப்படுவர்.
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 படியும் ஒருவரது புகைப்படத்தை அவரது அனுமதியின்றி பதிவு செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 லட்சம் அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கச் சட்டம் வழிவகை செய்துள்ளது. அதேபோல், அதே குற்றம் மீண்டும் மீண்டும் செய்வதாகக் கண்டறியப்பட்டால், தண்டனை அளவு அதிகரிக்கவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress, Alia Bhatt, Cyber crime