ஈரோடு தெப்பக்குளம் வீதியில் சீமான் பிரச்சாரம் நடைபெற இருந்த இடத்தில் திமுக - நாம் தமிழர் கட்சியினர் கல்வீசி தாக்கி கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். காவிரி நகர் பகுதியில் மேனகா நவநீதனை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரச்சாரத்தின்போது திமுக பணிமனை அருகே சீமான் பரப்புரை செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென இருவரும் தாக்கிக் கொண்டதாகவும் கற்கள் கட்டைகள் கொண்டு ஒருவர்களை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள்,பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் மீது கற்களை கொண்டு தாக்கியதால் அலறி அடித்துக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த கலவரம் காரணமாக சீமான் அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவரின் பிரச்சார வாகனத்தில் செங்கல், கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு நேரடி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருகில் சீமான் பிரச்சாரப் பொதுக் கூட்டத்திற்கு படையெடுத்து வந்த திமுகவினரை 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் விரட்டி அடித்ததால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
தற்போது சீமான் பிரச்சாரம் செய்த இடத்தில் பதற்றமான ஒரு சூழ்நிலையை நிலவி வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீமான் தேர்தல் பரப்புரையை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.மேலும் அந்த பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதால் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.