ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இவர்களை ஆதரித்து ஈரோடு பெரிய அக்ரஹாரம் பெரிய பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பதற்காக 3 கட்சியினரும் திரண்டனர். அப்போது முதலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பள்ளிவாசல் முன்பு திரண்டிருந்தனர். அப்போது திமுகவினர் நாம் தமிழர் கட்சியினரை வாக்கு சேகரிக்க விடாமல் இரண்டு புறமும் வரிசையாக மறித்து நின்றனர்.
அதன் பின்னர் பள்ளிவாசல் முக்கிய நிர்வாகிகள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் ஒருபுறம் அமைச்சர் நாசர் தலைமையில் திமுகவினரும், மற்றொருபுறம் நாம் தமிழர் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு புறமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட 2 கட்சியினரையும் காவல்துறையினர் 100 மீட்டரை தாண்டி நின்று வாக்கு சேகரிக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் 2 கட்சியினரும் அதனை கேட்காமல் பள்ளிவாசல் முன்பு நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து திமுகவினர் கோஷமிட்டனர். மேலும் விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டு நாம் தமிழர் கட்சியினர் கோஷமிட்டனர். இதனால் 2 கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பள்ளிவாசல் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அதிமுகவினரும் அதே பள்ளிவாசலில் வாக்கு கேட்பதற்காக வந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு 3 தரப்பினரையும் பள்ளிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் இடைவெளிக்கு அப்பால் இன்று வாக்கு சேகரிக்க அறிவுறுத்தினர். அதன் பின்னர் அனைவரையும் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஈரோடு பகுதியில் 3 கட்சியினரும் சேர்ந்து வாக்கு சேகரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பேசுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. மிக சிறப்பாக வெற்றி பெறுவோம். அதிமுகவின் பொதுக்குழு தீர்ப்பு வெற்றி என்பது கிழக்கு தொகுதியின் வெற்றி என கூறுகின்றனர். இதற்கான முடிவை கவுண்டிங்கில் பார்ப்போம். வாக்கு பதிவு செய்யும்போது தெரியும். வாக்கு எண்ணும்போதும் நிலவரம் என்ன என்பதை பற்றி தெரியும். காசு கொடுத்து யாரையும் விலைக்கு வாங்க முடியாது” என தெரிவித்தார்.
செய்தியாளர் : தினேஷ் - ஈரோடு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election, Erode, Local News