நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச் செல்வன் தொடர்புடைய வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில், இதுவரை 35 பேரின் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், 1,200 பக்க ஆதாரங்கள் சிக்கியதாக வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜயின் வீடு, ஏ.ஜி.எஸ் சினிமாஸ் அலுவலகம், பைனான்சியர் அன்புச் செல்வனின் வீடு உள்ளிட்ட பிகில் படக்குழுவுடன் தொடர்புடைய 30 இடங்களில் கடந்த பிப்ரவரி மாதம் வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் விஜயை, கடலூரிலிருந்து அழைத்துவந்த வருமானவரித்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் வைத்து விசாரித்தனர்.
பைனான்சியர் அன்புச் செல்வன் தொடர்புடைய இடங்களிலிருந்து சோதனையின் போது கணக்கில்வராத ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், ஏராளமான வரவு செலவு, முதலீடு ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சோதனை நடந்து 10 மாதங்களுக்கு பிறகு, விசாரணை முடித்த வருமானவரி புலனாய்வு பிரிவு, இறுதி அறிக்கையை தயாரித்துவருகிறது. எந்த நேரத்திலும் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் ரூ.180 கோடியில் தயாரிக்கப்பட்ட பிகில் திரைப்படம் ரூ.300 கோடி வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மாஸ்டருக்கு முன்னுரிமை... ஈஸ்வரன் படக்குழுவின் முயற்சி தோல்வி?
நீதிமன்றத்தில் தாக்கலாகும் இறுதி அறிக்கையில் பல அதிர்ச்சியான தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். கணக்கில் காட்டப்படாத வருவாய் குறித்து ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை கூறியுள்ள நிலையில், இந்த தகவல் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..