தி பிரேக் போலீஸ் அதிகாரி பீட்டர்ஸிடம் சைக்யாட்ரிஸ்ட் ஜாஸ்மினா விசாரணை மேற்கொள்வதிலிருந்து முன்னும் பின்னுமாக நகர்ந்து கதை சொல்லப்படுகிறது. News18 Last Updated : July 01, 2021, 19:12 IST யுஎஸ், யுகே, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், தென்கொரியா போன்ற நாடுகளில் தயாராகும் படங்கள், வெப் தொடர்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன. பெல்ஜியம் போன்ற சிறிய நாடுகளில் எடுக்கப்படுபவை அதிகம் பார்க்கப்படுவதோ, விவாதிக்கப்படுவதோ இல்லை. அங்கும் சிறப்பான திரைப்படங்கள், வெப் தொடர்கள் வரவே செய்கின்றன. தி பிரேக் குறிப்பிடத்தகுந்த வெப் தொடர். மர்டர் மிஸ்ட்ரி ஜானரைச் சேர்ந்தது. இதுவரை இரண்டு சீஸன்கள் வந்துள்ளன.
முதல் சீஸனில் கறுப்பிளைஞன் ஒருவன் கொல்லப்படுகிறான் . அவனை கொன்றது யார் என்பதை பெல்ஜியத்தின் தலைநகரிலிருந்து சொந்த ஊருக்கு மாற்றலாகி வரும் போலீஸ் அதிகாரி பீட்டர்ஸ் விசாரிக்கிறார் . அவர் எப்படி ஒவ்வொரு தடயமாக தேடி , சந்தேகத்துக்குரிய நபர்களை விசாரித்து , உண்மையை கண்டுபிடிக்கிறார் என்பது கதை .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
போலீஸ் அதிகாரி பீட்டர்ஸிடம் சைக்யாட்ரிஸ்ட் ஜாஸ்மினா விசாரணை மேற்கொள்வதிலிருந்து முன்னும் பின்னுமாக நகர்ந்து கதை சொல்லப்படுகிறது . இந்த வெப் தொடரின் சிறப்பம்சம் , கதை நடக்கும் பெல்ஜியத்தின் மரங்களும் , ஓடைகளும் , மேய்ச்சல் வெளிகளும் நிறைந்த Heiderfeld கிராமம் . சொற்ப வீடுகளே கொண்ட கிராமத்தில் , அந்நியர் யார் வந்தாலும் உடனே அனைவருக்கும் தெரிந்துவிடும் . இறந்த இளைஞன் ஃபுட்பால் விளையாட உள்ளூரில் உள்ள கிளப்பால் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டவன் . விளையாட்டில் நடக்கும் பெட்டிங் , அதற்குப் பின்னாலிருக்கும் மாஃபியா என்று ஆரம்பிக்கும் கதை , விரைவிலேயே வேறு தடத்துக்கு மாற , சந்தேகத்தின் நிழல் வெவ்வ று நபர்களின் மீது படிகிறது . இறுதியில் யாரும் எதிர்பார்க்காத நபர்தான் கொலையாளி என்ற திருப்பத்துடன் முடிகிறது .
பொதுவாக இதுபோன்ற மர்டர் மிஸ்டரில் கொலை செய்யப்பட்டவர் பெரும் புள்ளியாக இருப்பார் . அல்லது கொலை செய்யப்படுவதற்கான காரணத்துக்குப் பின்னால் அரசியல் போன்ற ஏதாவது பெரிய பிரச்சனை இருக்கும் . இதில் இரண்டும் இல்லை . கொலை செய்யப்பட்டது , கொலையுண்டது இருவருமே சாதாரண நபர்கள் . பின்னணியில் எந்தப் பெரிய பிரச்சனையும் இல்லை . ஆனால் , விசாரணையின் போது மனிதர்களின் காம்ப்ளக்ஸான குணங்கள் , அவர்களுக்கிடையே மோதிக் கொண்டிருக்கும் உணர்வுகள் , உளவியல் பிரச்சனைகள் என அனைத்தும் விளக்கமாக காட்டப்படுகிறது .
நாயகன் பீட்டர்ஸே உளவியல் சிக்கலில்தான் இருக்கி றா ர் . மனைவி நோயால் இறந்த நிலையில் ஒரு மாறுதலுக்காகவே அந்த கிராமத்துக்கு மகளுடன் வந்திருக்கிறார் . அது அவரது சொந்த ஊர் . முன்னாள் காதலி இப்போதும் திருமணம் செய்யாமல் இருக்கிறார் . வேலையில் பீட்டர்ஸ் காட்டுகிற தீவிரம் பல நேரம் உடனிருப்பவர்களை காயப்படுத்துகிறது . கிளைமாக்ஸில் அவரால் சக அதிகாரி பலியாகிறார் . கொன்றது அவரா இல்லை வில்லனா என்பது அவருக்கே குழப்பமாக உள்ளது . சைக்யாட்ரிஸ்ட் ஜாஸ்மினாவிடம் விடப்படுகிறார் . அங்கிருந்து பீட்டர்ஸின் பார்வையில் கதை முன்பின்னாக நகர்கிறது .
பீட்டர்ஸாக நடித்திருக்கும் Yoann Blanc வழக்கமான ஹீரோ அல்ல . பதட்டத்துடன் விஷயங்களை அணுகுகிறவர் . குற்றவுணர்வுக்கு ஆட்பட்டவர் . வேலையில் காட்டும் தீவிரமும் , புத்திசாலித்தனமுமே அவரது பிளஸ்கள் . அவரது டீன்ஏஜ் மகள் அப்பாவுடன் ஒட்டாமல் விலகியே இருக்கிறாள் .
இரண்டாவது சீஸனில் பீட்டர்ஸ் போலீஸ் வேலையைவிட்டு பேராசிரியராகியிருக்கிறார் . அவருக்கு சிகிச்சை அளித்த ஜாஸ்மினா வைக்கும் கோரிக்கையைத் தொடர்ந்து கொலை வழக்கு ஒன்றை விசாரிக்கத் தொடங்குகிறார் . கொலை செய்யப்பட்டது நடுத்தர வயது கழிந்த பெண் . கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞன் டேனி ஒன்பது வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணை கொலை செய்ததற்காக சிறைத்தண்டனைப் பெற்று திரும்பியவன் . ஜாஸ்மினாவிடம் சிகிச்சை பெறுகிறவன் . டேனி கொலை செய்திருக்க மாட்டான் என்று ஜாஸ்மினா நம்புகிறார் . ஒன்பது வருடங்களுக்கு முன்பும் டேனி பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறுகிறார் . இந்த இரு வழக்கிலும் டேனிக்கு எதிராக சாட்சி சொன்னது டேனியின் உடன்பிறந்த அண்ணன் .
பீட்டர்ஸின் விசாரணையில் பல்வேறு மர்மங்கள் தெரிய வருகின்றன . ஒருகாலத்தில் குற்றம் செய்தார்கள் என்பதற்காக இப்போதும் அவர்களை குற்றவாளி என கருத முடியாதது போலவே முன்பு தவறு செய்யாதவர்கள் இப்போதும் தவறிழைக்க மாட்டார்கள் என்பது உறுதியில்லை . இந்த இடத்தில் சைக்யாட்ரிஸ்டாக ஜாஸ்மினாவின் தவறான கணிப்பு அவருக்கே பிரச்சனையாகிறது .
Also read... Maha Movie: சிம்பு, ஹன்சிகா பட டீஸரை வெளியிடும் சிவகார்த்திகேயன்...!
முன்பே சொன்னது போல் , முக்கியமில்லாத நபர்கள் , முக்கியமில்லாத கொலையாளிகள் . இதனூடாக பல மனிதர்களின் மனதை ஊடுருவிக் காட்டுகிறது தி பிரேக் . ஒரு போலீஸ்காரனிடம் உயரதிகாரி காட்டும் அலட்சியம் கணநேர ஈகோவாகி , இரண்டாவது எபிசோடிலேயே முடிய வேண்டிய கதையை கடைசிவரை இழுத்துச் செல்கிறது . அதேபோல் , கண்ணில்படும் இடத்திலெல்லாம் ஆண் குறியை வரைந்து தள்ளும் பொடியன்தான் முக்கியமான தகவலைத் தந்து இரண்டாவது சீஸனை முடித்து வைக்கிறான் . இதேபோல் முக்கியமில்லாத சின்னச் சின்ன நிகழ்வுகள் சரடாக இணைந்து கதையை நகர்த்துகின்றன . நமக்கு அறிமுகமில்லாத பெல்ஜியத்தின் நிலக்காட்சிகளும் , அங்குள்ள போலீஸ் நடைமுறைகளும் , மனிதர்களின் குணாம்சங்களும் சலிப்பில்லாமல் தொடரை பார்க்க வைக்கின்றன .
ஆர்ப்பாட்டமில்லாத சஸ்பென்ஸ் த்ரில்லரின் ரசிகர் என்றால் தி பிரேக் உங்களுக்கானது .
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by: Vinothini Aandisamy
First published: July 01, 2021, 19:12 IST