தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒவ்வொரு நாளும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்பினாலும் இதுவரை 8,434 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஃப்ளோரன்ட் பெரைரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் மேலாளராக பணிபுரிந்த இவர், ‘புதிய கீதை’ படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தில் ஆனந்தியின் தந்தையாகவும், தொடரி, வேலையில்லா பட்டாதாரி, தரமணி, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக ‘குள்ளநரி கூட்டம்’ என்ற படத்தில் நடிக்க இருந்த புளோரன்ட் பெரைரா, திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கியிருப்பதால் இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென உடல்நிலை மோசமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மரணமடைந்தார்.
ஃப்ளோரன்ட் பெரைராவின் மரணம் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.