நடிகை ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதையடுத்து மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத பிறவு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியானார். இயக்குநர் ஃபாசில் இயக்கிய இந்தப் படம் ‘காதலுக்கு மரியாதை’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் கதாநாயகியாக ஷாலினியே நடித்தார். இதன் மூலம் அவர் தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார்.
அந்தப் படம் மிகச் சிறந்த வெற்றி பெற்றது. இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இதற்கிடையே 1999-ம் ஆண்டு அமர்க்களம் படப்பிடிப்பின் போது, படத்தின் ஹீரோ அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் நடித்து முடித்த கையோடு திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டார் ஷாலினி.
20-வருடங்களுக்கும் மேலான நிலையில், தற்போது மீண்டும் அவர் நடிக்க வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.