சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் வித்தியாசமான கதைக்களமும், அவ்வப்போது வைக்கப்படும் ட்விஸ்ட்களும் தான். அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பேரன்பு.
கடந்த 2021 டிசம்பர் 13 முதல் ஜீ தமிழ் சேனலில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது பேரன்பு சீரியல். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து பிரபலமான நடிகை வைஷ்ணவி பேரன்பு சீரியலில் வானதி என்ற ரோல் மூலம் நாயகியாக அறிமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். பேரன்பு சீரியலில் நடிகர் விமல் வெங்கடேசன் ஹீரோவாக நடித்து வருகிறார். பாண்டவர் பூமி திரைப்பட புகழ் நடிகை ஷமிதா ஸ்ரீகுமார், நாயகனின் அம்மாவாக ராஜராஜேஸ்வரி என்ற ரோலில் நடித்து வருகிறார்.
அமுதா என்ற மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிகை 'ஊர் வம்பு’ லட்சுமி நடிக்கிறார். மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியலில் "மெகா திருமண வைபவம்" என்ற பகுதி ஒளிபரப்பானது. இதில் பல்வேறு அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில் வானதி மற்றும் கார்த்திக்கு திருமணம் நடைபெற்றதா என்பதை உள்ளடக்கிய சீன்கள் ஒளிபரப்பாகின. அமுதாவின் வளர்ப்பு மகள் வானதிக்கும் நாயகன் கார்த்திக்-கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் நிலையில், கார்த்திக்கின் மீது ஆசைப்பட்ட பெண் திருமண வரவேற்பில் வானதியை வார்த்தையால் அசிங்கப்படுத்திவிட்டு போகிறார். இதனால் மனமுடைந்த வானதி தான் கார்த்திக்கிற்கு செட்டாக மாட்டோம் என்றெண்ணி கடிதம் எழுதி வைத்து விட்டு மண்டபத்தை வெளியேறி விடுகிறார். இந்த சூழலில் அமுதாவின் சொந்த மகளான ஆர்த்தியை மணமகளாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. கார்த்தியை மணக்க ஆர்த்தி ஆசையோடு சம்மதித்து மணமேடை ஏறும் சூழலில் வானதி மீண்டும் வந்து விடுகிறார்.
விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?
பல்வேறு கலவங்களுக்கு மத்தியில் எந்த சூழலிலும் வானதி மனதை காயப்படுத்தி விட்டு, இந்த திருமணத்தை நடத்த முடியாது. அவள் மனதை குளிர வைக்க மட்டுமே என்னால் முடியும் என்று கூறும் நாயகனின் அம்மா ராஜராஜேஸ்வரி, தான் முடிவு செய்தது போல வானதி - கார்த்தி கல்யாணமே நடக்கும், வானதி தான் என் வீட்டு மருமகள் என்று திட்டவட்டமாக மணமேடையில் நின்று கூறிவிடுகிறார். வா நீ உட்காரு என்று வானதியை கார்த்தியின் பக்கத்தில் அமர வைக்கிறார். இதை பார்த்து கதறி அழுது கொண்டே மணமேடையில் இருந்து இறங்கி ஓடுகிறாள் ஆர்த்தி. தனது சொந்த மகளின் நிலையை கண்டு அழும் அமுதா, கல்யாண கனவோடு மணமேடை வரை வந்த என் பெண்ணை இப்படி மனம்கலங்கி போக வச்சிட்டீங்களே என்று ராஜஜேஸ்வரியிடம் குமுறுகிறார்.
சகோதரிகள் அணி... கவனம் பெறும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - செளந்தர்யா ரஜினிகாந்த் படம்!
சீரியலில் முக்கிய ரோலில் நடிக்கும் ஆடிட்டர் ஸ்ரீதர், இருவரும் (வானதி,ஆர்த்தி) உன் பொண்ணு தானே மா.. எப்படி பார்த்தாலும் இது உன் வீட்டு கல்யாணம் என்று அமுதாவை தேற்றுகிறார். மணமக்களை மனமார வாழ்த்த அமுதாவை கேட்டு கொள்கிறார். இதனை தொடர்ந்து கார்த்தி - வானதி திருமணம் சிறப்பாக நடந்தேறுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.