தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மூக்குத்தி அம்மன். ஓடிடி தளத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருக்கிறார்.
இதனிடையே தமிழில் ‘நெற்றிக்கண்’ மலையாளத்தில் ‘நிழல்’ ஆகிய நயன்தாரா நடித்த திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் ‘நிழல்’ படத்தை அடுத்து மலையாளத்தில் நயன்தாரா நடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘பாட்டு’ என்ற டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்த அறிவிப்பை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், நயன்தாரா பாட்டு படத்தில் இணைவதில் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் மட்டுமின்றி இந்தப் படத்தின் இசையமைப்பாளராகவும் அல்போன்ஸ் புத்திரன் பணியாற்ற உள்ளார்.
2013-ம் ஆண்டு வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் 2015-ம் ஆண்டு ‘பிரேமம்’ படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அனைத்து மொழி ரசிகர்களாலும் ரசிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தான் சாய் பல்லவி அறிமுகமானார்.
மலர் டீச்சராக அவரது நடிப்பு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது. மேலும் பிரேமம் படம் நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோருக்கும் அவர்களது திரைவாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.