சிம்பு - கவுதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணிக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இவர்கள் மூவரும் இணைந்து பணியாற்றிய விண்ணைத்தாண்டி வருவாயா மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் அச்சம் என்பது மடமையடா திரைப்படமும், அந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. மீண்டும் இந்தக் கூட்டணி எப்போது இணையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அமைந்தது கார்த்தி டயல் செய்த எண் குறும்படம்.
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தொடர்ச்சியாக கார்த்தியும், ஜெஸ்ஸியும் ஊரடங்கு காலத்தில் போனில் பேசிக் கொள்ளும் உரையாடல் தான் கதை. இக்குறும்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். யூடியூபில் வெளியிடப்பட்ட இக்குறும்படம் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஈஸ்வரன் படத்தை அடுத்து வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்ததாக ‘பத்து தல’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். அதைத்தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.