இயக்குநர் சிம்புதேவனை அவன் இவன் என்று வடிவேலு பேசியதற்கு இயக்குநர் சுசீந்திரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் சங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் சிம்புதேவன் முயற்சித்தார். ஆனால் அப்படத்தில் இருந்து நடிகர் வடிவேலு வெளியேறிதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கர், இயக்குநர் சிம்புதேவன், நடிகர் வடிவேலு ஆகியோருக்கு இடையே பிரச்னைகள் எழத்தொடங்கியது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகர் வடிவேலு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் சிம்புதேவனை அவன், இவன் என பேசினார். இதையடுத்து அவரை பலரும் விமர்சனம் செய்தனர். தற்போது இயக்குநர் சுசீந்திரன் அவர் செய்தது தவறு என்று கூறி ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்
அதில், ‘வடிவேலு அவர்கள், 23-ம் புலிகேசி இயக்குநர் சிம்புதேவன் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கர் பற்றி பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இயக்குநர் சிம்புதேவன் 23-ம் புலிகேசி மூலம் இயக்குநராக அறிமுகமானவர். தன் முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தந்தார். அதன் பிறகு பல தரமான திரைப்படங்களை நமக்கு தந்துள்ளார். ஒரு இயக்குநரை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசி இருப்பது மிகவும் தவறான அணுகுமுறை. புலிகேசி-க்கு பிறகு வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன், எலி, தெனாலிராமன் படங்களின் ரிசல்ட் அனைவருக்கும் தெரியும். ஒரு இயக்குநர் என்ற முறையில் வடிவேலு அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.