தனது சகோதரர் விஷத்தை கொடுத்ததால் தனது சிறுநீரகம் செயலிழந்து போனதாக பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முக்கிய வில்லனாக 90-களில் வலம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். ரஜினி, கமல், அஜித் , விஜய் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருக்கிறார். மேலும் தென்னிந்திய மொழிகளிலும் பல்வேறு படங்களில் இவர் இடம் பெற்றுள்ளார். குறிப்பாக நாட்டாமை படத்தில் சரத்குமாருக்கு வில்லனாக நடித்தது, பொன்னம்பலத்திற்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்று தந்தது.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக சிறுநீரகம் செயலிழந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு உறவினரும், இயக்குனருமான ஜெகன்நாதன் சிறுநீரகத்தை வழங்கியதால் பொன்னம்பலம் உயிர் பிழைத்ததாக தகவல்கள் வெளிவந்தன. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி பொன்னம்பலத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஓய்வில் இருந்து வரும் அவர், பிஹைண்ட் வுட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் பரபரப்பான தகவல்களை கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
குடிப்பழக்கம், போதை பொருட்களை பயன்படுத்தியதால் எனது சிறுநீரகம் செயல் இழந்ததாக பலர் நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. என் அப்பாவுக்கு 4 மனைவிகள். மூன்றாவது மனைவியின் மகன் என்னிடம் மேனேஜராக சில காலம் பணியாற்றினார். அவர் ஒருமுறை எனக்கு பீரில் விஷத்தை (ஸ்லோ பாய்சன்) கலந்து கொடுத்து விட்டார்.
இதை அவர் தான் செய்தார் என்று எனக்கு முதலில் தெரியவில்லை. பின்னாளில் தான் அவர் இந்த மோசமான காரியத்தை செய்தார் என தெரிய வந்தது. நான் இப்போது கடவுளின் அருளால் உடல் நலம் குணமடைந்து வருகிறேன். எனது கஷ்டமான நேரத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood