தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்
மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியிருக்கும் 4-வது திரைப்படம் மாமனிதன்.
ஒரு மனிதன்! அவனுக்குள் இருக்கும் மனிதம்!! இதுவே மாமனிதன். அதை பார்பவர்களுக்கு கடத்தும் முயற்சியில் இந்தப் படத்தை எடுத்துள்ளார் சீனு ராமசாமி.
ஆட்டோர் ஓட்டுநராக வரும் விஜய் சேதுபதி, தன் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். அதிகம் படிக்காத அவர், தன் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சிக்கிறார். அதற்காக விஜய் சேதுபதி எடுக்கும் ஒரு முடிவு அவரின் வாழ்க்கையை சிக்கலாக்கிவிடுகிறது. எதிர்பாராதவிதமாக பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் விஜய் சேதுபதி தன்னுடைய சொந்த ஊர், குடும்பம் என அனைத்துவிட்டு ஓடி தலைமறைவாகிறார். அவர் எங்கு சென்றார்? திரும்ப வந்தாரா? அவரின் செயலால் குடும்பம் என்ன ஆனது? விஜய் சேதுபதி என்ன ஆனார் என்பது மீதி கதை.
கன்னட நடிகருக்கு ரஜினிகாந்த் கொடுத்த சர்ப்ரைஸ்!
துப்பாக்கி சத்தம், பஞ்ச் டயலாக், காதை பிளக்கும் பின்னணி இசை, அடிதடி ஆர்பாட்டம் என எதுவும் இல்லாமல், கிராமத்து பின்னணியில் ஒரு எதார்த்தமான குடும்ப கதையை நிதானமாகவும் அமைதியாகவும் கூறியுள்ளார் இயக்குநர். குடும்பம் நிம்மதியாக இருக்க வேண்டும் என தலைமறைவாகி, நாயகன் படும் கஷ்டங்களுக்கான காட்சிகளை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம் என தோன்ற வைக்கிறது. இருந்தாலும் இரண்டாம் பாதியில் மூன்று இடங்களில் கண்ணீர் வரவைக்கும் காட்சிகள் உள்ளன.
இந்தப் படத்தில் இடம் பெறும் "தெரிஞ்ச வேலையை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்", "அப்பன் (தந்தை) தோத்த ஊர்ல, புள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்" என்ற வசனங்கள் கவனிக்கை வைக்கின்றன. மாமனிதன் படத்தில் கதாபாத்திரங்கள் குறைவு. ஆனால் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முயற்சித்துள்ளனர். அதில் காயத்ரி, குரு சோமசுந்தரம், மலையாள நடிகை Jewel Mary ஆகியோர் தங்கள் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். அதேபோல் விஜய் சேதுபதியின் மகளாக வரும் மானஷ்வி தன்னுடைய காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார்.
மாமனிதன் படத்திற்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். ஆனால் இருவரின் சாயலும் இல்லாமல் இருக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என தோன்ற வைக்கிறது. மேலும் சீனு ராமசாமி படங்களின் பாடல்கள் தேசிய விருது வென்றுள்ளன. ஆனால் இந்தப் படத்தில் அந்த வகையான பாடல்கள் இல்லை.
பண்ணைப்புரத்தில் தொடங்கி ஆலப்புழா, வாரணாசி வரை கதை பயணிக்கிறது. ஆனால் ஒரே நேர்கோட்டில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு குடும்பத்தின் பயணத்தை மகிழ்ச்சி மற்றும் வலியை பார்வையாளர்களுக்கு கடத்த மாமனிதன் முயற்சிக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.