விடுதலை திரைப்படத்தில் சொல்ல வேண்டும் என்றும் நினைக்கும் அரசியல், கேள்வி கேட்க வேண்டும் என்று நினைக்கும் விஷயங்களை விஜய் சேதுபதி இருந்ததால் சவுகரியமாக இருந்தது என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் விடுதலை திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். விடுதலை முதல் பாகத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட இளையராஜா படத்தின் பாடலை வெளியிட்டு மேடையில் பேசினார். அப்போது வெற்றிமாறன் திரையுலகின் முக்கியமான இயக்குனர் என பாராட்டினார். மேலும் விடுதலை படத்தின் கதை இதுவரை திரையுலகில் சொல்லப்படாதது என கூறினார். இதுவரை 1500 திரைப்படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். அவ்வளவு இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளேன். ஆனால் இப்போதும் சொல்கிறேன் வெற்றிமாறன் திரையுலகில் முக்கியமான இயக்குனர் என கூறினார்.
அவர் பேசுகையில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரமாக சத்தம் எழுப்பினர். அப்போது கோபமடைந்த இளையராஜா மைக்கை போட்டுவிட்டு சென்று விடுவேன் என்று தெரிவித்தார். அதன் பிறகு படத்தில் இடம்பெறும் வழிநெடுக காட்டுமல்லி என்ற பாடலில் சில வரிகளை மேடையில் பாடினார்.
இதன் பிறகு படக்குழுவினர் பலரும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதில் குறிப்பாக நடிகர் சூரி இந்த திரைப்படத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்த தன்னுடைய அனுபவங்களையும், சூழல்கள் குறித்தும் மிக நகைச்சுவையாக கூறினார். அத்துடன் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடித்த பிறகு இனி எந்த இயக்குனரின் படங்களிலும் நடித்து விடுவேன் என பெருமிதமடைந்தார்.
சூரியை தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, நடிகர் சூரி தன்னுடைய பேச்சால் அரங்கத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார். மிகச் சிறப்பாக பேசினார் என பாராட்டினார். மேலும் இந்த திரைப்படத்தில் முதலில் எட்டு நாட்கள் மட்டும் நடித்தால் போதும் என வெற்றிமாறன் அழைத்து தன்னை ஏமாற்றிவிட்டார் என கிண்டலடித்தார். இதில் 65 நாட்கள் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
விடுதலை முதல் பாகத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இறுதியாக பேசிய வெற்றிமாறன், படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும், தொழிலாளர்களையும் பாராட்டினார். விடுதலை படத்தின் படப்பிடிப்பு மிக கடுமையான சூழல்களில் நடைபெற்றது. அதற்கு அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டினார். அப்போது நடிகர்களை பற்றி பேசுகையில், விடுதலை படத்தில் தான் பேச நினைக்கும் அரசியல், கேள்வி கேட்க வேண்டும் என்று நினைக்கும் விஷயங்களை விஜய் சேதுபதி போன்ற நடிகர் இருந்ததால் மிக உறுதியாக செய்ய முடிந்தது என மகிழ்ச்சி அடைந்தார்.
விடுதலை படம் முதலில் 4 கோடி ரூபாய் செலவில் எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த போது அந்த தொகை முழுவதும் காலி ஆகிவிட்டது. இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வந்ததற்கு தயாரிப்பாளரும் மிக முக்கியமாக உதவியுள்ளார். அவருக்கு இந்த கதையின் மீது இருந்த நம்பிக்கையே காரணம் எனவும் வெற்றிமாறன் கூறினார்.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் 30ஆம் தேதி வெளியாகியுள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்தப் படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Soori, Actor Vijay Sethupathi, Director vetrimaran