சிவாஜி போன்ற ஜாம்பவானுக்கு ஒருமுறைகூட நடிப்புக்கான தேசிய விருது வழங்கப்பட்டதில்லை. எனினும், நடிப்புக்காக தேசிய விருது பெறுவது இன்றும் ஓர் அரிய அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. மூன்றுமுறை இந்த விருதை முதல்முறை வாங்கிய நடிகர் கமல்ஹாசன். அவருக்குப் பிறகு மம்முட்டி மூன்று முறை இந்த விருதை வாங்கினார். நான்காவது யார் முந்தப் போகிறார்கள் என்ற போட்டி சில வருடங்கள் முன்புவரை இருந்தது. விக்ரமில் நடித்து, அந்தப் போட்டியிலிருந்து கமல் விலகிக் கொள்ள, நண்பகல் நேரத்து மயக்கத்தில் நடித்து, நான்காவது விருதுக்கு அடித்தளம் போட்டுள்ளார் மம்முட்டி.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஊர்வசி விருது என்பார்கள். அந்த விருதை மூன்றுமுறை பெற்ற முதல் நடிகை சாரதா. ஊர்வசி சாரதா என்றால் இன்னும் பலருக்கு தெரியும். 1945 இல் சாரதா ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள தெனாலியில் பிறந்தார். இயற்பெயர் சரஸ்வதிதேவி. அப்பா வெங்கடேசலு ராவ், அம்மா சத்தியவதி. நாட்டியம் அறிந்த சிறுமி சரஸ்வதிதேவி, தனது பதினோராவது வயதில் என்டிராமராவின் கன்னியா கல்கம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். தனது 16 வது வயதில் நடித்த, இத்தரு பித்ருலு தெலுங்குப் படம் சாரதாவின் வாழ்க்கையை மாற்றியது. நாகேஸ்வரராவின் தங்கையாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பில் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டைப் பெற்றார். அதன் பிறகு குணச்சித்திர வேடம் என்றால் கூப்டு சாரதாவை என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானார்.
சாரதாவின் திறமையை புடம்போட்டது மலையாளத் திரையுலகம். எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதையாசிரியராக அறிமுகமான முறப்பொண்ணு படத்தின் மூலம் தனது 21 வது வயதில் மலையாளத்தில் பிரவேசித்தார் சாரதா. ஏ.வின்செட் இயக்கத்தில், பிரேம் நஸீர் நடித்த இப்படம் வெற்றி பெற , இந்தக் கூட்டணி மேலும் பல படங்களில் தொடர்ந்து, வெற்றிகளை குவித்தது. 1968 இல் பிரேம் நஸீருடன் நடித்த துலாபாரம் படத்துக்காக சிறந்த நடிகைக்கான முதல் தேசிய விருதை சாரதா பெற்றார். அந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான போது மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மாற்றப்பட்டனர். மாறாத ஒரேயொருவர் சாரதா. அந்தளவுக்கு துலாபாரம் கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறொருவரை யோசிக்க யாராலும் முடியவில்லை.
மலையாளத்தில் சாரதா அறிமுகமான ஓரிரு வருடங்களில் தமிழில் அறிமுகமானார். அப்போது சினிமாவுடன் நாடகங்களிலும் அவர் நடித்து வந்தார். அவர் நடித்த திருப்பதி நாடகத்துக்கு தலைமை தாங்க வந்த சிவாஜி கணேசன் சாரதாவின் நடிப்பைப் பார்த்து குங்குமம் படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கினார். துளசி மாடம், வாழ்க்கை வாழ்வதற்கே, ஞான ஒளி, என்னைப் போல் ஒருவன் என தொடர்ந்நது சிவாஜி படங்களில் நடித்தார். எம்ஜிஆருடன் நினைத்ததை முடிப்பவன் படத்தில் நடித்தார்.
Also read... விஜய் படங்களால் பிரபல தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம்!
மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய ஸ்வயம்வரம் சாரதாவின் நடிப்புத் திறமைக்கு சான்றாக விளங்கும் மற்றுமொரு படம். இதில் நடித்ததற்காக 1972 இல் இரண்டாவது முறை நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்றார். 1979 இல் பி.எஸ்.நாராயணா இயக்கத்தில் நடித்த நிமாஜனம் தெலுங்குப் படம் அவருக்கு 3 வது தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
சாரதாவை மலையாளம், தெலுங்கு சினிமாக்கள் பயன்படுத்திக் கொண்ட அளவுக்கு தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது ஒரு குறை. வயதான பிறகு மலையாளத்தில் பல படங்களில் நடித்தார். நயன்தாரா மம்முட்டியுடன் நடித்த ராப்பகல் படத்தில் மம்முட்டிக்கு இணையான வேடம் சாரதாவுக்கு தரப்பட்டிருந்தது. இன்றும் ஊர்வசி சாரதா என்றால் எழுபதுகளின் ரசிகர்களுக்கு துலாபாரமும், ஞான ஒளியும், துளசி மாடமும் மனதில் நிழலாடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema