திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் 10.03.2022ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தை திரையிடக்கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் மூலம் மிரட்டிவருவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் 10-ம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ், பிரியங்கா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கடலூரில் வெளியிடக் கூடாது என்று பா.ம.க மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் விஜயவர்மன் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக காட்டியிருந்தார். அதற்கு மன்னிப்பு கோரவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பா.ம.கவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘2021 நவம்பரில் வெளியான ஜெய்பீம் படம், வன்னியர்களை அவமதித்துவிட்டதாகவும் அதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கதாநாயகருமான சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தவொரு படத்தையும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும் அப்போது பாமகவினர் மிரட்டல் விடுத்திருந்தனர்.
அந்த மிரட்டலின் தொடர்ச்சியில்தான் இப்போது எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக்கூடாதென அக்கட்சியினரும் வன்னிய சங்கத்தினரும் மிரட்டிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு இவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைவதற்கும், மிரட்டலுக்குப் பணியாமல் படத்தை வெளியிடுவதற்கு உகந்தச் சூழலை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.
சூர்யா படத்தை கடலூரில் வெளியிடக் கூடாது- திரையரங்கு உரிமையாளர் சங்கத்துக்கு பா.ம.க கடிதம்
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் பெயரால் விடுக்கப்பட்டுள்ள இம்மிரட்டலுக்கு எதிராக குரலெழுப்புமாறு கருத்துரிமையில் நம்பிக்கையுள்ள யாவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.