தமிழில் வெற்றி பெற்ற வெங்கட்பிரபுவின் மாநாடு திரைப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. வெங்கட்பிரபு இந்த ரீமேக்கை இயக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். தமிழில் படம் வெளியாகும்போது அதன் தெலுங்கு பதிப்பை வெளியிட திட்டமிட்டிருந்தனர். சில காரணங்களால் அந்த திட்டம் தள்ளிப்போனது. அதேநேரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற டப்பிங்கைவிட ரீமேக் ரைட்ஸ் அதிக தொகைக்கு விலை போகும் என்பதால் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட வில்லை.
ஆரம்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளை தாண்டி மாநாடு படத்தின் டப்பிங், ரீமேக் உரிமைகளை விற்பதற்கு இருந்த தடை விலகியது. அதனை தொடர்ந்து சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மாநாடு படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியுள்ளது.
இது நடிகர் ராணாவின் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனம். இவர்கள் நாக சைதன்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் மாநாடு திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ் ஜே சூர்யா நடித்த வேடத்தில் ராணா நடிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. படத்தை வெங்கட்பிரபு இயக்கலாம் என்கின்றன தகவல்கள்.
வெங்கட்பிரபுவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் விரைவில் தெலுங்குப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறியிருந்தார். அது இந்த ரீமேக்காகவும் இருக்கலாம். வெங்கட் பிரபு ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.