நடிகர் விஜய், கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் பின்னர், நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், விஜய் தரப்பில் 7,98,075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30,23,609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17ல் வணிக வரித்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இதே கோரிக்கைகளுடன் அடையார் கேட் ஹோட்டல் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுக்களும் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவோடு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2008ம் ஆண்டு கார் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் வரி செலுத்தக்கோரி 2021ம் ஆண்டு தான் நோட்டீஸ் அளித்ததால் அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டுமென வாதிப்பட்டது.
நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர், கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் ஆனால் தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே நடிகர் விஜய் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள வணிக வரித்துறை, நுழைவு வரியை செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் 2019ல் உத்தரவு பிறப்பித்த பிறகும் வரி செலுத்தப்படவில்லை என்றும் குறித்த காலத்தில் நுழைவு வரி செலுத்தாததால், 2005 டிசம்பர் முதல், 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக 30,23,609 ரூபாய் செலுத்தும்படி உத்தரவிட்டதாகவும், சட்டத்தில் அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காரை வேறொரு நபருக்கு விற்று விட்டதாக நடிகர் விஜய் கூறினாலும், இறக்குமதி செய்த அவர் நுழைவு வரி செலுத்தியாக வேண்டும் எனவும், ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் கொடுத்து, போதிய அவகாசம் வழங்கிய போதும், எந்த பதிலும் இல்லாததால் வட்டார போக்குவரத்து அலுவலக ஆவணங்களைப் பெற்று நுழைவு வரியை கணக்கிட்டதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் விஜய் தொடர்ந்த இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் ஹோட்டல் தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.