கோலிவுட்டில் முன்னணி டப்பிங் கலைஞராகவும், நடிகையாகவும் இருக்கும் ரவீனா ரவி, விக்ரம் நடித்த ஐ, தனுஷ் நடித்த அனேகன், கத்தி, தெறி, இமைக்கா நொடிகள், அடங்க மறு, ஈஸ்வரன், பூமி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் கொடுத்தவர். நயன்தாரா, சமந்தா, மாளவிகா மோஹனன் போன்றவர்களுக்கு டப்பிங் கொடுத்துவரும் ரவீனா, தனது ட்விட்டர் தளத்தில் டப்பிங் கலைஞர்களுக்கு ஏன் கலைமாமணி விருது அளிக்கப்படுவதில்லை என்னும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரவீனா ரவியின் அம்மா ஸ்ரீஜா ரவியும் பிரபல டப்பிங் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறுபவர்கள் குறித்த பட்டியலை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி-19-ஆம் தேதி வெளியிட்டது. இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.