நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறப்பு திரையுலகினர், ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. அதுவும் அதிகாலை வரை சிவராத்திரி வழிபாட்டில் கோயிலில் இருந்த அவர், சில மணி நேரத்தில் உயிரிழந்த விஷயத்தை இன்னும் நம்ப முடியாமல் தவிக்கிறார்கள் அவரது நண்பர்களும் ரசிகர்களும்.
ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு கடந்த நவம்பர் மாதம், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளார் மயில்சாமி. பின்னர் வழக்கம் போல் செயல்பட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென அவர் உயிரிழந்த விஷயம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என அரசு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியின், இதயநோய் துறைத்தலைவர் மருத்துவர் ஆறுமுகத்திடம் கேட்டோம்.
மாரடைப்பு ஏற்பட்டு ஸ்டெண்ட் (Stent) செய்திருந்தால், மாத்திரைகளை விடாமல் சாப்பிட வேண்டும். 2-3 நாட்கள் மருந்து சாப்பிடாமல் விட்டால் கூட மீண்டும் அது அடைத்துக் கொள்ளும். பைபாஸ் செய்து பம்பிங் குறைவாக இருக்கும் பட்சத்தில், அதிக உற்சாகமாக இருந்தால், திடீரென இதயத்தில் அடைப்பு ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது. மாரடைப்பு ஏற்பட்டு, பைபாஸ் சர்ஜரி அல்லது ஸ்டெண்ட் என எந்த சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், அது தோல்வியடையும் நிலையில் இருக்கும் போது அதிக உற்சாகமோ அல்லது சோகமோ, நமது வழக்கமான உணர்விலிருந்து கொஞ்சம் மாறினாலும், மீண்டும் மாரடைப்பு வரலாம்.
மயில்சாமி விஷயத்தில் அவரது மெடிக்கல் ஹிஸ்டரி எப்படி இருந்தது எனத் தெரியவில்லை. ஒருவேளை அவர் சர்க்கரை நோயாளியாக இருந்திருந்தால் மாரடைப்பு வர நிறைய வாய்ப்பிருக்கிறது. வழக்கமாக 10.30-க்கு தூங்கும் ஒருவர், மாறாக அதிகாலை வரை விழித்திருத்தலே ஒருவித ஸ்ட்ரெஸ்ஸை உருவாக்கும். இதைத்தான் பழக்கமில்லாத ஸ்ட்ரெஸ் (Unaccustomed Stress) என்போம். கோயிலில் மயில்சாமி மகிழ்ச்சியாக விழித்திருந்தாலும், அவர் உடலுக்கு இது வழக்கத்திற்கு மாறான விஷயம்.
இளம் வயதில் மாரடைப்பு - வராமல் தடுப்பது எப்படி?
ஃபேமிலி ஹிஸ்டரி இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அப்பாவோ, அம்மாவோ 40-களில் மாரடைப்பு வந்தவராக இருந்தால், பிள்ளைகளுக்கும் அது வரலாம். புகைப்பிடித்தல், ஆல்கஹால், போதை மருந்து போன்றவற்றிலிருந்து கட்டாயம் விலகியிருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாவதை பார்க்க முடிகிறது, இளம் வயதிலேயே இந்த மாதிரியான விஷயங்கள் பின்னாடி சென்றால் அவர்கள் நிச்சயம் மாட்டிக் கொள்வார்கள்.
சிலருக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும், சிலர் வழக்கத்துக்கு மாறாக அதிக நேரம் உடற்பயிற்சி செய்வார்கள். இன்னும் சிலர் எந்த வேலையும் செய்யாமல், ஃபோனில் கேம் விளையாடுவார்கள். சிலருக்கு அடிப்படையிலேயே இதய தசை பெரிதாக இருக்கும், இல்லையென்றால் மரபு ரீதியான இதய நோய்கள் இருக்கும். இவர்களுக்கு எல்லாம் திடீர் மாரடைப்பு ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது. இதன் பின்னணியில் அடிக்கடி அதிக உற்சாகமடைபவர்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நாங்கள் 22 - 30 வயதுகளில் பல இதய நோயாளிகளைப் பார்க்கிறோம். அவர்களிடம் நாங்கள் கேட்கும் முதல் கேள்வியே, புகைப்பிடிக்கிறாரா, ட்ரக் எதுவும் எடுத்துக் கொண்டாரா என்பது தான். இவற்றுடன் லைப் ஸ்டைலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்போது பெரும்பாலானோர் உட்கார்ந்து தான் வேலை செய்கிறார்கள். அதோடு நிறைய ஜங்க் ஃபுட்டும் சாப்பிடும் போது, அவர்களின் உடல் எடை கூடுகிறது. வீட்டில் பைக்கை ஸ்டார்ட் செய்தால், ஆபிஸில் போய் நிறுத்துவது என உடல் உழைப்பே இல்லாமல் இருக்கிறோம். இவையெல்லாம் இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கின்றன.
40 வயதுக்கு மேற்பட்டவர்களின் கவனத்துக்கு
சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் பெண்களுக்கு அவ்வளவு எளிதில் மாரடைப்பு வராது. இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது. இதற்குக் காரணம் சர்க்கரை தான்.
சத்தான உணவு சாப்பிடுவது, முறையாக உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற விஷயங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். சின்ன சின்ன லைப் ஸ்டைல் மாற்றங்களும் உங்களை மாரடைப்பில் இருந்து காக்கும்.
மாரடைப்பு வந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
முதலில் எது மாரடைப்பு என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். காரணம் பலர் அதை வாயுத்தொல்லை என நினைத்துக் கொள்கிறார்கள். நடு மார்பு வலியுடன் அடைத்து, உடம்பெல்லாம் வியர்த்தால் அதை மாரடைப்பு என்றறிக. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டவருக்கும், மீண்டும் வந்தால் பிபி செக் செய்த பின்னர் தான் நாக்கிற்கு கீழ் மாத்திரை வைக்க வேண்டும். ஒரு சிலருக்கு பிபி கம்மியாக இருக்கும். அவர்கள் நாக்கிற்கு கீழ் மாத்திரை வைத்தால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு தான் மாரடைப்பு. அந்த அடைப்பை சரிசெய்ய உடனடியாக மருந்து கொடுத்தால் சிறந்த பலனைப் பெறலாம். தாமதமானால் மருந்து வேலை செய்யாமல் போய்விடும். நிறைய பேர் நமக்கு எதுவும் வராது என்ற மனநிலையில் இருக்கிறார்கள். அது பாஸிட்டிவான மனநிலை என்றாலும், எல்லா நேரத்திலும் இது உதவாது.
இதயநோய் சிகிச்சைக்குப் பின் பின்பற்ற வேண்டியவை
ஸ்டெண்ட் வைத்தவர்கள் 3 மாதம், 6 மாதம் 1 வருடம் என மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப கட்டாயம் மருந்து உட்கொள்ள வேண்டும். இதோடு, சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்து, லைப் ஸ்டைல் மாற்றங்களை செய்ய வேண்டும். பொதுவாக பைபாஸ் சர்ஜரி செய்திருந்தால் 5 வருடத்திற்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. இதில் ஆர்ட்ரி, வெயின் என இரண்டு முறை உள்ளது. ஆர்ட்ரி பைபாஸ் என்றால் 10 வருடம் நன்றாக வேலை செய்யும். வெயின் என்றால் ஒவ்வொரு வருடமும் வேலை செய்யாமல் போக வாய்ப்புள்ளது. அப்படி என்றால் எல்லாருக்கும் ஆர்ட்ரி பைபாஸ் செய்ய வேண்டியது தானே என்றால், அது நோயாளியின் நிலையைப் பொறுத்து மாறுபடும். அப்படி செய்தும் இதயம் அடைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆகையால் எதையும் உறுதியாக சொல்ல முடியாது. அதனால் இதயநோய் சிகிச்சைக்குப் பின் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
என்னால் 2 தளம் தான் ஸ்ட்ரெஸ் ஆகாமல் ஏற முடியும் என்றால், 2-வது தளத்தில் 5 நிமிடம் ரிலாக்ஸ் ஆகிவிட்டு தான் 3-வது தளத்திற்கு செல்ல வேண்டும். ஆகையால் உங்களால் எது முடியுமோ அதை சரிவர செய்ய வேண்டும். உடற்பயிற்சி என்பதற்காக எடுத்ததும் 1 மணிநேரம் செய்யக் கூடாது. 5 நிமிடத்தில் ஆரம்பித்து படிப்படியாக நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் உங்களால் எந்தளவு ஸ்ட்ரெஸ்ஸை சமாளிக்க முடியுமோ அதற்குள் மட்டும் உங்கள் வேலையோ அல்லது வெளி விஷயங்களோ இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதயநோயைப் பொறுத்தவரை மகிழ்ச்சி, துக்கம், ஸ்ட்ரெஸ் என அளவுக்கு மீறிய எல்லாமே ஆபத்து தான்.
உடற்பயிற்சியுடன் கூடிய தியானம் நல்ல பலனைக் கொடுக்கும். சிலர் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு உள்ள ஒரு அட்வான்டேஜ் என்னவென்றால், எது நடந்தாலும் கடவுள் பார்த்துக் கொள்வார் என பிரச்னைகளை பெரிதுப்படுத்த மாட்டார்கள். எதைப் பற்றியும் வருத்தமோ கவலையோ கொள்ள மாட்டார்கள். இதனால் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து எளிதில் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். பதட்டமில்லாத ரிலாக்ஸான லைப் ஸ்டைலுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cardiac Arrest, Heart attack