கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது.
பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரைத்துறையினரும், ரசிகர்களும் எஸ்.பி.பி நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். கடந்த சில நாட்களாக மருத்துவமனை தரப்பில் எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.சரணும் தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
எஸ்.பி.சரண் இன்று வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது, “நேற்றைப் போலவே இன்றும் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. தீவிர சிகிச்சையில் இருந்தாலும் உடல்நிலை சீராக இருக்கிறது. எந்த ஒரு சிக்கலும் இல்லை. இது நல்ல அறிகுறி என மருத்துவர்கள் எண்ணுகிறார்கள். எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
இருப்பினும் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை இன்னமும் மோசமான நிலையில் உள்ளது. அவரைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.