சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.
ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அறிவித்தார்.
இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை லெஜண்ட் சரவணன் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.
அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெறும் கோகுலம் ஸ்டுடியோவில் தான் லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.