இதய பாதிப்பு ஏற்பட்டுள்ள தமிழ் சினிமாவின் ஜாம்பவான் டி. ராஜேந்தருக்கு, அமெரிக்காவில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற சிம்பு டி.ஆரின், சிகிச்சைக்கான ஏற்பாட்டை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து டி.ராஜேந்தர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
என் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் எனது உடல் நலம் பற்றி நல்லபடியாக செய்தி போட்ட ஊடகத்தினருக்கு முதல் நன்றி.
இன்று செய்தியாளர்களை சந்திக்கும் எண்ணம் எனக்கில்லை. என்னைப் பற்றி சில வதந்திகள் பரவி உள்ளது. அதனால் தான் இன்று செய்தியாளர்கள் சந்திக்கின்றேன்.
இதையும் படிங்க - தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. என் முகத்தில் தான் தாடி வைத்து இருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் எதையும் மூடி வைத்தது இல்லை. நான் இன்று தான் அமெரிக்கா செல்கிறேன். ஆனால் அதற்கு முன்னதாகவே பல கதைகளை எழுதி நான் அமெரிக்கா சென்று விட்டதாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
நானே ஒரு நடிகன், இயக்குனர். எனக்கே கதை எழுதி திரையிட முயற்சிக்கின்றனர். விதியை மீறி எதுவும் நடக்காது. எனக்காக பிரார்த்தனை செய்த கட்சிக்காரர்கள், என் ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள் என்னுடைய அபிமானிகள் அனைவருக்கும் நன்றி.
உலகத்தில் வாழக்கூடிய அனைத்து ஈழத்தமிழ் மக்கள் இருக்கும் வரையிலும் என்னை பற்றி எந்த வதந்திகள் வந்தாலும் நம்ப வேண்டாம். நான் மேல்சிகிச்சைக்காக சென்று மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன்.
இதையும் படிங்க - விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தினருக்கு ஜெயம் ரவி ஆறுதல்… குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார்…
நான் இன்று வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதற்கான காரணம் எனது மகன் சிலம்பரசன் தான். அவன் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் நான் ஒப்புக் கொண்டேன். சிம்பு படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு தாய் தந்தைக்காக 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான்.
இவ்வாறு டி.ராஜேந்தர் கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.