சிவராத்திரி நிகழ்வில் பங்கேற்றிருந்த நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று முழுவதும் கோயிலில் தன்னுடன் மயில்சாமி இருந்த அனுபவத்தை டிரம்ஸ் சிவமணி பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ஸ் சிவமணி, “நடிகர் மயில்சாமி மகா சிவராத்திரிக்கு இந்த ஆண்டு திருவண்ணாமலை செல்லவில்லை. கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்லலாம் என கூறினார். நாங்கள் இருவரும் சிவன் கோயிலுக்கு சென்று விடிய விடிய சிவன் பாடல்களை பாடி சிவனின் அருளை பெற்றோம். மயில்சாமி விடியற்காலை 3 மணியளவில், வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது கூட மயில்சாமிக்கு நன்றி சொல்லி ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். திடீரென 5 மணியளவில் மயில்சாமியின் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. இசை கச்சேரியை முடித்து விட்டேன் என கூறலாம் என அழைப்பை எடுத்த போது, அவர் காலமான செய்தி தெரிந்தது” என கூறினார்.
மேலும், “விவேக் சாரை இந்த கோயிலுக்கு அழைத்து வந்திருக்கிறேன். உன்னையும் அழைத்து வந்துவிட்டேன். எனது கடைசி ஆசை நடிகர் ரஜினிகாந்தையும் இந்த கோயிலுக்கு அழைத்து வர வேண்டும் என்பது தான்” என கூறியதாக தெரிவித்தார்.
அவருக்கு சிவன் என்றால் ரொம்ப பிடிக்கும், அப்படி சிவனுக்கு உகந்த நாளிலேயே அவருக்கு மோட்சம் கிட்டியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என ட்ரம்ஸ் சிவமணி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.