கதைத் திருட்டு புகார்கள் தமிழ் சினிமாவில் ஆதிகாலம் தொட்டு இருந்து வருகிறது. திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் அயோத்தி படத்தின் கதை எஸ்.ராமகிருஷ்ணனுடையது அல்ல என்று ஒரு சார்ச்சை தற்போது போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் கதைத் திருட்டுக்காக கோர்ட்டுக்குச் சென்ற முதல் படம் எது தெரியுமா? எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி.
இந்த விவகாரத்தை பூரணமாக தெரிந்து கொள்ள சதிலீலாவதி வெளியாவதற்கு ஆறு வருடங்கள் பின்னோக்கி 1930 க்கு செல்ல வேண்டும். அந்த வருடத்தில் பதி பக்தி நாடகத்தை கிருஷ்ணசுவாமி பாகவதர் எழுதினார். அன்று காந்தியக் கொள்கைகள் நாட்டில் பேசுபொருளாக மாறியிருந்தன. பதி பக்தி குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் எப்படி சீரழிந்தது என்பதை பேசியது.
இந்த நாடகத்தை கந்தசாமி முதலியார் என்ற நாடக ஆசிரியர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்காக சின்னச் சின்ன மாற்றங்களுடன் மறுபடி எழுதினார். அந்த நாடகமும் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனை படமாக்க விரும்பினார் மனோரமா பிலிம்ஸ் ஏ.என்.மருதாசலம் செட்டியார். அந்த நேரம், பதி பக்தி நாடகத்தை திரைப்படமாக்கும் முயற்சியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி இறங்கியிருந்தது. இதனால், மருதாசலம் செட்டியார் நாடகாசிரியர் கந்தசாமி முதலியாரை அணுக, அவர் எஸ்.எஸ்.வாசன் எழுதி, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த சதிலீலாவதி கதை பதி பக்தி போல் சிறப்பானதாக இருக்கும், அதை படமாக்குங்கள் என அறிவுரை கூறியுள்ளார். அதன்படி 200 ரூபாய்க்கு சதிலீலாவதி கதையை வாங்கி, எல்லிஸ் ஆர்.டங்கனை வைத்து படத்தை எடுத்தார் மருதாசலம் செட்டியார்.
எல்லிஸ் ஆர்.டங்கன் அமெரிக்கர். தமிழ் தெரியாது, அதனால் தமிழ் தெரிந்த சி.கே.சதாசிவனை அசோஸியேட் இயக்குனராகவும் பஞ்சு (கிருஷ்ணன் - பஞ்சு) உதவி இயக்குனராகவும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் எல்லிஸ் ஆர்.டங்கன் சதிலீலாவதியை இயக்க உதவினர்.
சதிலீலாவதி தயாரிப்பில் இருக்கும் போது, அதன் மீது கதைத் திருட்டுக்காக மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி வழக்குத் தொடுத்தது. பதி பக்தி, சதிலீலாவதி இரண்டும் ஒரேவிதமான கதையை கொண்டிருந்தன. படத்தின் பிரதான கதாபாத்திரத்தின் மனைவி பெயர் இரண்டிலும் சதிலீலாவதி. இரண்டும் குடியால் ஒரு குடும்பம் அழிவதைப் பற்றியது. பதி பக்தி 1930 எழுதப்பட்ட நாடகம். சதிலீலாவதி 1934 இல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கதை. யார் ஒரிஜினல் புருஷன் என்ற வடிவேலு காமெடி போல் பதி பக்தியா, சதிலீலாவதியா யார் ஒரிஜினல் என்று கோர்ட்டில் வழக்கு தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கையில், எஸ்.எஸ்.வாசன், நாங்க ரெண்டு பேருமே இல்லை, ஒரிஜினல் கதை 1860 வெளிவந்த Ellen Wood எழுதிய Danesbury House நாவல் என்ற உண்மையை போட்டுடைத்தார். இந்த நாவலைத் தழுவிதான் பதி பக்தி நாடகமும், சதிலீலாவதி கதையும் எழுதப்பட்டது.
இறுதியில், இரண்டுமே ஒரிஜினல் இல்லை, போய் தொலைங்க என்று கோர்ட் வழக்கை கைவிட, 1936 பிப்ரவரி 1 ஆம் தேதி சதிலீலாவதியும், மார்ச் 14 ஆம் தேதி பதி பக்தியும் வெளியாயின. இந்த இரு படங்களின் பிரதியும் இப்போது இல்லை.
பதி பக்தி வெளியாகி 22 வருடங்களுக்குப் பிறகு பீம்சிங் அதே பெயரில் சிவாஜி, ஜெமினி, சாவித்ரியை வைத்து ஒரு படம் எடுத்தார். அப்படம் 1958 மார்ச் 14 ஆம் தேதி வெளியானது. இது வேறு கதை. அப்படி 1936 வெளியான பதிபக்தி திரைக்கு வந்து இன்று 87 வருடங்களும், 1958 பதி பக்தி திரைக்கு வந்து 65 வருடங்களும் நிறைவு பெறுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema