நடிகர், சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்ட ஆரி பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்து கொண்டு வெற்றியாளராக தேர்வானார். மற்ற போட்டியாளர்களிடம் ஆரம்பம் முதலே எதிர்ப்பை சம்பாதித்து வந்த ஆரிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது.
சக போட்டியாளர்கள் செய்யும் தவறை சரியான நேரத்தில் சுட்டிக் காட்டி சிறப்பாக பங்களித்ததால் ஆரி வெற்றி பெற்றதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அவருக்கு அடுத்தபடியாக பாலாஜி முருகதாஸ் இந்த சீசனில் இரண்டாம் இடம் பிடித்தார். பிக்பாஸ்க்குப் பின் தனது பட வேலைகளில் பிஸியாகியிருக்கும் ஆரி, இன்று முதல் தனது ‘பகவான்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் செஞ்சி கோட்டையில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
ஆரியின் இந்த பதிவைப் பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டுக்குள் ஆரி இருந்த போது ‘பகவான்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருந்த நடிகர் ஆரியைப் பார்த்து சக போட்டியாளர்கள் அவரை வாழ்த்தினர். மேலும் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கலைஞன் இயக்கும் இந்தப் படத்துக்கு கலைஞன் பிரசன் பாலா இசையமைக்க முருகேசன் சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். அதுல் விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இதுதவிர அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் ஆகிய படங்களும் ஆரி நடிப்பில் உருவாகி வருகின்றன.