கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர் ரேஷ்மி. இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். இந்த நிலையில் இவர் கோட்டயத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரேஸ்மி உயிரிழந்தார்.
அவரைப் போலவே அதே உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட மற்ற 20 பேரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலை சோதனை செய்து சீல் வைத்தனர். மற்றொரு பக்கம் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கோட்டயத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சோதனை செய்ய உத்தரவிட்டார்.
மாநில அளவில் 429 உணவகங்களில் சோதனை செய்யப்பட்ட நிலையில் 138 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் 43 உணவகங்களின் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்திருந்தார். கேரளாவில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தனது முகநூல் பக்கத்தில், சுகாதாரமற்ற உணவினால் தனக்கு நேர்ந்த உடல்நிலை பாதிப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “சினிமா விமர்சகர்களே, தயவு இந்த மாதிரி சம்பவங்கள் குறித்து வீடியோ வெளியிடுங்கள். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அலுவா பகுதியில் ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டேன். எனக்கு நடிகர் சராஃபுதீன் டிரீட் வழங்கினார். நாங்கள் அந்த ஷவர்மாவையும் அது கூடவே வழங்கப்படும் மயோனஸையும் வேக வேகமாக சாப்பிட்டோம். அடுத்த நாள் எனக்கு அடி வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
என்னுடைய பெற்றோர்கள் என் மருத்துவ செலவுக்காக ரூ.70,000 செலவு செய்தார்கள். நான் சராஃபுதீன் மீது கடுமையாக கோபப்பட்டேன். ஷவர்மா பாக்டீரியா கொண்ட உணவு. அதனை சாப்பிட்டதால் ஃபுட் பாய்சனிங் ஏற்படலாம். இந்த இடத்தில் யார் குற்றவாளி ? தயவுசெய்து உங்களை சுற்றி நடப்பனவற்றை கண் திறந்து பாருங்கள். வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நிவின் பாலி - நஸ்ரியா இணைந்து நடித்த 'நேரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். இவர் மலையாளத்தில் இயக்கிய 'பிரமேம்' படத்தை தமிழ்நாடு ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தனர். மலையாள படமான பிரேமம் தமிழ்நாட்டில் மட்டும் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தமிழ்நாட்டு இளைஞர்கள் தாடி வளர்த்து திரிய அந்தப் படம் ஒரு மிகப்பெரிய காரணம். இதனால் அல்போன்ஸ் அடுத்ததாக இயக்கும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இவரது இயக்கத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு பிருத்விராஜ் - நயன்தாரா நடித்த கோல்டு படம் கடந்த வருட இறுதியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Briyani, Food, Food allergy