தமிழ் சினிமாவில் அரசியல் கட்சிகளின் சின்னத்தை, கொடியின் வர்ணத்தை வைத்து பரப்புரை செய்யும் காட்சிகள் தொன்று தொட்டே இருந்து வந்திருக்கிறது. இரட்டை விரலை காட்டுவதும், உதயசூரியனைப்போல் ஐந்து விரல்களை காட்டுவதும், கருப்பு சிவப்பு உடையில் வருவதும், அதிமுக கொடியின் நிறத்தில் உடைகள் அணிவதும் தமிழ் சினிமாவில் சர்வசாதாரணம்.
ஆனால் அவற்றை எல்லாம் நடிகர்கள் தான் செய்வார்கள். முக்கியமாக படத்தின் நாயகன் தான் அது போன்ற கட்சி பரப்புரையில் ஈடுபடுவார். அந்த காட்சிகளுக்கு கைதட்டலும் விசிலும் பறக்கும். ஆனால் நடிகைகளும் அரிதாக இந்த கட்சி பரப்புரை வேலையை செய்திருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் கிடைக்காத கைதட்டலும், விசிலும் கனகாவின் கரகாட்டக்காரன் காஸ்ட்யூமுக்கு கிடைத்தது என்றால் நம்ப முடிகிறதா.
1989-ல் கங்கைஅமரன் கரகாட்டக்காரன் படத்தை எடுக்கும்போது அதில் நாயகனாக நடித்த ராமராஜன் தமிழகமெங்கும் பிரபலமாகி இருந்தார். நடிகர் என்பதைத் தாண்டி அதிமுகவின் ஆத்மார்த்தமான தொண்டர் என்றவகையில் அவருக்கு தமிழகமெங்கும் ரசிகர்கள் இருந்தனர். எம்ஜிஆரின் வாரிசு என்று ராமராஜனின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு வண்டி கட்டிச் சென்று அவரைப் பார்த்து பரவசப்பட்டு மாலையும் சால்வையும் அணிவிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அப்போது இருந்தார்கள். அடுத்த முதல்வர் ராமராஜன் என்ற கோஷம் அப்போது பிரபலம். தனது கலையுலக வாரிசு என்று எம்ஜிஆரே, பாக்யராஜை கைகாட்டி இருந்தாலும் அதிமுக தொண்டர்களுக்கு எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் முற்பகுதியிலும் கட்சியின் கலங்கரை விளக்கமாக திரையுலகில் இருந்தவர் ராமராஜன்.
பல்வேறு படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ராமராஜன் நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். அடர்த்தியான மீசை வைத்து அட்டகாசமாக அவரது அறிமுகம் அமைந்தது. படம் 100 நாள்கள் ஓடியது. இரண்டாவது மூன்றாவது படத்திலேயே தனது அடர்ந்த மீசையை எம்ஜிஆரை போல பென்சில் மீசையாக்கி, உதடுகளில் லிப்ஸ்டிக் பூசி அவரை பிரதி எடுக்க ஆரம்பித்தார். அதற்கு நல்ல பலனும் இருந்தது. கரகாட்டக்காரன் 1989-ல் வெளியானபோது ராமராஜன் ஸ்டார் நடிகராக இருந்தார். உடன் நடித்தது அதிமுக தொண்டர்கள், தலைவருடன் பார்த்து ரசித்த தேவிகாவின் மகள் கனகா.
அதிமுக தொண்டர்களின் உற்சாகத்திற்கு வேறு காரணம் வேண்டுமா என்ன? கரகாட்டக்காரன் படத்தின் எளிமையான கதையும், கவுண்டமணி செந்திலின் வாழைப்பழ காமெடி உள்ளிட்ட நகைச்சுவையும், கிராமத்து காதலும், இளையராஜாவின் கேட்டுச் சலிக்காத பாடல்களும் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கின.
ஆனால் ராமராஜன், கனகாவின் அறிமுகக் காட்சிகளைவிட அதிக கைத்தட்டல்களும், விசில் வரவேற்பும் கனகா இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்குதான் கிடைத்தது.
ஒரு போஸ்டர் கூட ஒழுங்கா பண்ண தெரியாதா... பொன்னியின் செல்வன் படக்குழுவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
மாங்குயிலே பூங்குயிலே பாடல் கரகாட்டக்காரன் படத்தில் இரண்டு முறை வரும். முதலில் ராமராஜன் தனது குழுவினருடன் ஆட, ஊர் மொத்தமும் கூடி நின்று வேடிக்கை பார்க்கும். முதல் முறையாக கனகாவும் அப்போதுதான் மறைந்திருந்து ராமராஜனை பார்ப்பார். அதன்பிறகு ராமராஜன், கனகாவின் டூயட் பாடலாக வரும். பாடலின் இரண்டாவது சரணம் பெண் குரலில், "மாமரத்துக் கீழே நின்னு மங்கை அவ பாட..." என்று ஆரம்பிக்கும் போது திரையரங்குகள் அதிரும். விசில் சத்தம் காதைப் பிளக்கும். திரை தெரியாதபடி பேப்பர்களும், பூக்களும் வாரி இறைக்கப்படும். சில திரையரங்குகளில் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. அந்த சரணம் முடியும்வரை தொண்டர்களின் ஆரவாரத்தில் திரையரங்குகள் பொடிபடும்.
ரிலீஸ் தேதியுடன் நடிகர்களின் லுக்கை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு!
அந்த சரணத்தின் போது கனகா கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற பாவாடை அணிந்திருப்பார். அதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்கள். விஷயம் தெரியாதவர்கள் எதற்கு திடீரென இந்த கொண்டாட்டம் என பேய்முழி முழித்ததும் நடந்திருக்கிறது. கங்கை அமரனும் இந்தக் காட்சியில் சோலோவாக கனகாவை காட்டி, கைத்தட்டலுக்கான ஸ்பேஸை ஏற்படுத்தி தந்திருப்பார். சுற்றிலும் பச்சை நிறத்தில் சூரியகாந்தி செடிகள் இருக்க, ராமராஜன் கனகாவை கையில் ஏந்தும் காட்சியை டாப் ஆங்கிளில் எடுத்து தொண்டர்களின் வெறியை அதிகப்படுத்தியிருப்பார். இதுபோன்ற வரவேற்பு ராமராஜன் அதிமுக கொடி நிறத்தில் உடை அணிந்து வந்த போதுகூட கிடைத்ததில்லை.
அந்த காலகட்டத்தில் திருவிழாக்களிலும், பொருட்காட்சிகளிலும் திரை கட்டி படங்களை திரையிடுவது உண்டு. அப்படி திரையிடப்பட்ட படங்களில் அதிகமுறை திரையிடப்பட்டது கரகாட்டக்காரன் திரைப்படம் தான். அப்பொழுது எல்லாம் இந்த காட்சி வருகையில் திருவிழாக்களும் பொருட்காட்களும் கிடுகிடுக்கும்.
பிரிவுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்தித்த தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... என்ன நடந்தது?
ஒரு காலத்தில் அடுத்த முதலமைச்சர், அடுத்த எம்ஜிஆர் என்று கொண்டாடப்பட்ட ராமராஜன் இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை. ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரவேற்ற கனகாவின் விலாசமும் தெரியவில்லை. சினிமா எப்போது யாரை உச்சத்தில் வைக்கும், எப்போது அடி ஆழத்தில் அழுத்தம் என்பது யாருக்கும் தெரியாது. இந்த இரு நிலைகளை கடந்து எப்போதும் திரையில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் ஒரு சிலர் தான். வளரும் நடிகர்கள் இந்த மாயையை மனதில் கொள்வது மிக அவசியம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.